நெல்லை கவிநேசன் நண்பருக்கு கலைமாமணி விருது

நெல்லை கவிநேசன் நண்பருக்கு கலைமாமணி விருது



சமீபத்தில் கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்தது. மதுரையைச் சேர்ந்த கரகாட்ட கலைஞரும், ஆடிட்டருமான தவமணியும் கலைமாமணி விருது பெறுகிறார். மதுரை குருவிக்காரன் சாலை நியூ பங்கஜம் காலனியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தபோது, தவமணி கூறியதாவது -

“கடந்த 32 ஆண்டுகளாக கரகம் ஆடி வருகிறேன். கல்லூரியில் படிக்கும்போது நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக கரகம் ஆட தொடங்கினேன். கல்லூரிகளுக்கிடையே, பல்கலைக்கழகங்களுக்கிடையே என படிப்படியாக பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளை பெற்றிருக்கிறேன். சிறுவயதில் கோவில்களில் நடத்தப்படும் கரகாட்டத்தை ஆயிரக்கணக்கான மேடைகளில் கரகம் டி இருக்கிறேன். படித்துக்கொண்டே கரகத்தை முறைப்படி கற்றுக்கொண்டேன். இன்றுவரை என்னுடைய குரு கலைமாமணி விருது பெற்ற சோமசுந்தரம்தான்.

சாலைவிதிகளின் முக்கியத்துவம்

முதுகலை பட்டப்படிப்பு முடித்தபின்னர் சார்ட்டண்ட் அக்கவுண்டன்ட் (ஆடிட்டர்) ஆவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான படிப்பை படித்தேன். அதிலும் சிறந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று ஆடிட்டர் ஆனேன். படித்து முடித்தாலும் கலையின்மீது இருந்த ஆர்வமிகுதியால், எங்கு நிகழ்ச்சிகள் நடந்தாலும், கலந்து கொள்வேன். பிறந்தநாள் விழா, திருமண விழா, பூப்புனித நீராட்டு விழா, கோவில் திருவிழா என எல்லா நிகழ்ச்சிகளிலும் கரகம் ஆடி இருக்கிறேன்.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, டெல்லி போன்ற இடங்களிலும், இலங்கை போன்ற நாடுகளிலும் கரகம் ஆடி இருக்கிறேன். தற்போது ஆடிட்டராக பணிபுரிந்தாலும் கிடைக்கும் நேரங்களில் கரகத்துடன் பொது சேவையும் செய்து வருகிறேன். சாலை பாதுகாப்பு வார விழாக்களில் போலீசாருடன் இணைந்து, சாலை விதிகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

தற்போது ஆடிட்டர் சங்கங்களின் சார்பில் நடக்கும் சர்வதேச நிகழ்ச்சிகளிலும் கரகம் ஆடுகிறேன். நாட்டுப்புற கலைகள் குறித்து இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள். மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி நாட்டுப்புற கலைகளையும் வளர்க்க வேண்டும். படிப்பில் சாதித்தாலும், கலையிலும் சாதிக்க வேண்டும். 2017ஆம் ஆண்டிற்கா கலைமாமணி விருதுகள் பட்டியலில் என் பெயர் இடம் பிடித்தது மகிழ்ச்சி தருகிறது. இந்த விருது என்னை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினத்தந்தி.

Post a Comment

புதியது பழையவை

Sports News