கதைகள்


1. அவளா செய்தாள்?

“ஆன்டி! ஆன்டி!” என்று அழுதவாறு அவளுடைய இரும்புப் பிடியில் இருந்து விடுபட முடியாத பீதியில் அவன் திகைத்து நின்றபோதே… அவன் கழுத்தை தன் பலங்கொண்ட மட்டும் நெரித்தாள் மோகனா. அவள் ஆவேசம் அடங்கியபோது மணி துவண்டு விழுந்தாள். முன் கதவைத் தாளிட்டு விட்டு அவனைத் தூக்கினாள். பாத்திரங்களை வைத்துப் பூட்டும் செல்பினுள் வைத்துப் பூட்டினாள்.

பால்ராஜ் சாட்சிக் கூண்டில் ஏறி நின்றான். சுற்று முற்றும் பார்த்தான். அவனையும் அறியாமல் ஒருவித பயம் மனத்தில் ஒட்டிக் கொண்டிது. 12 வயதுள்ள சிறுவன், அவன்!

எதிரே, அவன் இதுவரை கண்டிராத ஓர் இறுக்கமான கோர்ட்! கறுப்பு உடையில் நீதிபதி, வழக்கறிஞர்கள் மற்றும் சிலர்.

மனத்தில் எழுந்த பயம் அவனை அழும்படி செய்தது. கண்ணில் வந்த நீர்த்துளிகள் அவனைப் பேசவிடாமல் செய்தது. அவன் பயமும் அழுகையும் கலந்து குரலில் சொன்னான்;

“எங்க அம்மாதான் கொலை செய்தாங்க. என் ப்ரண்ட் மணியை எங்க அம்மாதான் கழுத்தை நெரிச்சு கொலை செய்தாங்க.”

- முதல் சாட்சியாய் போடப்பட்டிருந்த பால்ராஜ். சென்னை அயன்புரன் பள்ளியின் மாணவன்.

அவன் அப்பா ‘ஆனந்தன்’ ஓர் அரசு நிறுவனத்தின் அதிகாரி. சோந்த ஊர் கேரளாவிலுள்ள கோட்டயம்.

கேரளாவில் வேலை பார்த்த ஆனந்தன் சமீபத்தில் தான் மாற்றலாகி சென்னை வந்தார். கேரளாவில் பணி புரியும்போது மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தார் - கோட்டயத்தில் மோகனாவை மணந்த பிறகும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்க்கை நகர்ந்தது. மணவாழ்க்கையின் பலனாய்  பால்ராஜை தனது செல்வ மகனாய்ப் பெற்ற போதும் ஆனந்தமாய்தான் இருந்தார்.

ஆனால் பால்ராஜ் குழந்தைப் பருவத்திலிருந்து உயர்ந்து பள்ளிச் சிறுவனாக வளர்ந்தவுடன் இந்த மகிழ்ச்சியெல்லாம் அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு போய்விட்டது.

பால்ராஜூக்கு ஏழு வயது இருக்கும்போது அவனது தாய் மோகனாவின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு நல்லவள் ஆகிவிடுகிறாள்.

மோகனாவுக்குள் - திடீர் மாற்றம்.

கேரளாவிலிருந்த போதும் கூட ஒரு நாள் - ஆனந்தன் ஆபீஸ் சென்று விட்டு திரும்பியபோது மோகனா தலைவிரி  கோலத்துடன் நின்றுகொண்டு, “எங்கே போயிட்டு வர்றீங்க? அந்த நடனக்காரி வதனாகிட்டே தானே போயிட்டு வர்றீங்க?” – என ஆத்திரத்துடன் கேட்டுவிட்டு எதிர் வீட்டை நோக்கி ஓடினாள்.

எதிர் வீட்டில் ஒரு சினிமா துணை டைரக்டர் இருந்தார். அவரிடமும் போய் “எம் புரு-னை நடனக்காரி கிட்டே அனுப்பிட்டியே பாவி” என்றாள்.

இப்படி கொஞ்சம் நேரம் அமர்க்களம் பண்ணினாள் ஓரிரு மணி நேரம் கழித்து –

“என்னங்க… ஆபீஸ்லேருந்து எப்போ வந்தீங்க. சாப்டீங்களா?” என சாதாரணமாக, இதுவரை எதுவும் நடக்காதது போல பேச ஆரம்பித்து விட்டாள்.

ஆனந்தன் பேரதிர்ச்சிக்கு உள்ளானார்.

தன் மனைவிக்குள் இப்படி ஏன் இந்த மாற்றம்? அவர் பல டாக்டர்களிடம் அழைத்துப் போனார்.

மோகனாவைப் பரிசோதித்த டாக்டர் இவளுக்கு “ஸ்கிஸோப்ரீனியா” என்ற மனநோய் பிடித்துள்ளது. இந்த மனநோய் உள்ளவர்கள் திடீரென தான் யார் என்பதை மறந்து செயல்படுவார்கள். அவர்கள் காதில் யாரோ எதையோ சொல்வதைப்போல இருக்கும் அதை அப்படியே நம்பி அதன்படி செயல்படுவார்கள். இந்த நோய் திடிரெனத் தோன்றும். பின் திடீரென மறைந்துவிடும்” என்று கூறி டாக்டர் பலவித மருந்துகளையும் மாத்திரைகளையும் கொடுத்து தொடர்ந்து சாப்பிட்டு வரச் சொன்னார்.

இந்த நிலையில்தான் ஆனந்தன் சென்னைக்கு மாற்றப்பட்டார். குடும்பத்துடன் அயன்புரத்தில் தங்கியிருந்தனர். சென்னை வந்த பிறகு மோகனாவுக்குள் அந்தக் ‘கொடூரமான மோகனா’ அவ்வப்போது தலைகாட்டத் தொடங்கினாள்.

திடீரென ஒரு நாள் -

தனது வீட்டிற்குக் கீழ்ப்புறத்திலுள்ள பக்கத்து வீட்டிற்குச் சென்றாள். அங்கு ஒரு பெண் தனியாய் இருந்தாள்.

“ஏய்.. எம் புருஷனை நீதானே திட்டினே…?’-என்ற ஆவேசத்துடன் சொல்லிக்  கொண்டே தனது கையிலிருந்து குடைக்கம்பியால் அவனைக் குத்த முற்பட்டாள் மோகனா. அவள் தப்பித்தோம் பிழைத்தோம் என தெருவுக்கு ஓட, அருகிலிருந்தவர்கள் அவளைக் காப்பாற்றினார்கள்.

மோகனாவுக்கு இந்த மனநோய் வரும்போது இரண்டு மூன்று ஆண்களுக்குள்ள பலம் வந்து விடுகிறது. சாதாரண நேரங்களில் தன்னால் அசைக்க முடியாத அம்மியைக்கூட தூக்கி வீசி விடுவாள்.

இன்னொரு நாள் -

ஆனந்தன் வேலை செய்யும் அலுவலகத்திற்கு மதியம் 12 மணியளவில் சென்று அவரை அழைத்தாள். அவர் வந்ததும் “அட! நீங்க உயிரோடு தான் இருக்கிறீங்க! உங்களை யாரோ கொலை செய்யப் போறதா சொன்னாங்க! நீங்க உயிர் பிழைச்சது பத்தி சந்தோசம்!” என்று குழந்தை போல பேசி மகிழ்ந்தாள்.

ஆனந்தனும் தன்னால் முடிந்த அளவு சிகிச்சை செய்துதான் பார்த்தார். மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். பெரிய பெரிய ஸ்பெஷலிஸ்டுகளிடமும் இவளைக் கொண்டுபோய் காட்டினார்.

அந்த டாக்டர்களும் நிலை உயர்ந்த மருந்துகளை எழுதினார்கள். ஆனந்தன் உடனுக்குடன் மருந்துகளை வாங்கினார். ஆனால் அவற்றை விழுங்க மோகனா மறுத்தாள். கஷடப்பட்டு பிடிவாதமாய் அவள் வாய்க்குள் திணித்தாலும் அவள் துப்பி விடுவாள்.

தன்னால் கவனிக்க முடியாத நிலை ஏற்படவே மோகனாவை கேரளாவிலுள்ள தனது சகோதரர்வீட்டில் கொண்டு விட்டு வந்தார். மோகனாவோ சில நாட்களில் அங்கிருந்து தப்பி ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்து இறங்கினாள்.

அவள் நேராக வீடு திரும்பியபோது அங்கு ஆனந்தன் இருந்தார். அவரிடம் அமைதியாய் நெருங்கி வந்தாள் மோகனா.

“என்னை எதுக்காக கொண்டுபோய் கேரளாவில் விட்டுட்டீங்க, நம் குழந்தையை யாரு கவனிப்பாங்க?”

-  இவள் பணிவாய், அடக்கமாய், அன்பாய் சொன்னபோது ஆனந்தனின் மனம் நெகிழ்ந்தது. தானே தவறு செய்துவிட்டதுபோல் உணர்ந்தார்.

இது நடந்து நான்கு நாள்கூட முழுதாய் முடியவில்லை.

பால்ராஜ் அன்று பள்ளி சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தான். அவனுடன் எப்போதுமே அன்புடன் பழகும் வகுப்பு நண்பன் மணியும் வந்தான்.

மாலை நேரமாதலால் இருவரும் தங்கள் புத்தகப் பைகளை ஒரு ஓரமாக வைத்து வீட்டின் எதிரேயுள்ள மைதானத்தில் விளையாடத் தொடங்கினர். சுமார் ஒரு மணி நேரம் விளையாடிய களைப்புடன் இருவரும் வந்தபோது மெதுவாய் இருட்டத் தொடங்கி இருந்தது. வீட்டில் பால்ராஜின் தாய் மோகனா மட்டும் இருந்தாள்.

பால்ராஜின் நண்பன் மணியைக் கண்டதும் மோகனா ஆவேசமாகக் கத்தினாள்.

“டேய்… தினமும் நீ இங்கே வந்து என் பையன் படிப்பைக் கெடுத்துகிட்டே இருக்கிறே! உன்னை இங்கே வராதேன்னு எத்தனை நாளாய் சொல்றேன்?” என்று சொல்லிக் கொண்டே ஆவேசமாய் அவனை நெருங்கி வந்தாள்.

“ஆன்டி! நீங்க என்ன சொல்றீங்க….?” – மணி பயந்து நடுங்கினான்.

“ஆன்டி! ஆன்டி…!” என்று அழுதவாறு அவளின் இரும்புப் பிடியில் இருந்து விடுபட முடியாத பீதியில் அவன் திகைத்து நின்றபோதே… அவன் கழுத்தைத் தன் பலங்கொண்ட மட்டும் நெரித்தாள் மோகனா. அவள் ஆவேசம் அடங்கியபோது மணி கொடியாக துவண்டு விழுந்தான். முன் கதவைத் தாளிட்டு விட்டு அவனைத் தூக்கினாள். பாத்திரங்கள் வைத்துப் பூட்டும் ‘செல்ப்’பினுள் வைத்துப் பூட்டினாள்.

இதற்குள் கதவைத் திறந்துகொண்டு “அய்யோ… அம்மா… அய்யோ… அம்மா” – என்று கத்தினான் பால்ராஜ்.

அவனுடைய அபயக்குரல் கேட்ட அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்தார்கள்.

விசாரிக்க வந்தவர்களிடம் ‘ஒண்ணுமில்லை போங்கய்யா’ என விரட்டினாள்.

பயந்து நடுங்கிய பால்ராஜ் அப்படியே திகைத்து நின்றான்.

சிறிது நேரத்தில் அப்பா ஆனந்தன் அலுவலகம் முடிந்து வீடு வந்தார்.

அவரிடம் வி~யத்தைச் சொன்னான்.

அவர் பாத்திரங்களை அடுக்கும் ‘செல்ப்’பைத் திறந்தார். அங்கே மயக்கம் தெளியாத நிலையில் மணி குற்றுயிராக இருந்தான். அவசர அவசரமாய் ‘ஆட்டோ’ பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். டாக்டர்கள் அவனைப் பரிசோதிக்க ஆரம்பித்தபோது மணி இறந்து போனான்.

மணியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
   
போலீஸ் தரப்பில் மோகனாவை மனநோயாளி எனக்காட்டாமல் மணியை மோகனா கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டாள் என்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதில் மோகனாவின் கணவர் ஆனந்தன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆதாரபூர்வமாக விஷயங்களைச் சொன்னார்.

இ.பி.கோ. (இந்திய குற்றவியல் சட்டம்) 302-வது பிரிவின்படி ஒருவர் மற்றவரைப் கொலைசெய்ய வேண்டும் என்ற உள்நோக்கோடு மரணம் விளைவித்தால் அது கொலைக் குற்றமாகும். அந்த கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும.

ஆனால், இந்த 302-வது செக்சனுக்கு ஒரு விதி விலக்கு உள்ளது. சென்சன் 84 (இ.பி.கோ.) படி “தான் செய்வதை உணராமல் கூரிய அறிவுத் தெளிவு இல்லாத (Unsound Mind) மனநோயாளி ஒருவர் உள் நோக்கமன்றி மற்றவருக்கு மரணம் விளைவித்தால் அது கொலைக் குற்றம் ஆகாது” – எனக் கூறுகிறது.

அப்படிக் பார்க்கும்போது மோகனா ஒரு மனநோயாளி என்பதுடன் அதற்கு டாக்டர்களின் மருத்துவச் சான்றிதழும் உள்ளது. பல்வேறு நபர்களும் சாட்சி கூறுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக முதல் சாட்சியான மோகனாவின் மகன் பால்ராஜூவும் வி~யத்தை விளக்குகிறான்.” என்று வழக்கறிஞர் சொன்னபோது நீதிபதி அதற்கு அனுமதித்தார்.

சாட்சிக் கூண்டில் நின்ற பால்ராஜ் அழுதுகொண்டே நடந்த உண்மை நிகழ்ச்சிகளை விளக்கினான்.

தீர ஆராய்ந்த நீதிபதி, ‘உள்நோக்கமின்றி (No Intention) செய்யப்பட்ட கொலை இது. மன நோய் பிடித்த நேரத்தில் செய்ததால் இந்த நபருக்கு – மோகனாவுக்கு விடுதலை வழங்குகிறேன்’ என்ற தனது தீர்ப்பில் கூறினார்.


                              2.தியாகப் பரிசு

“என்னங்க…. நீங்க கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா? – கேள்விக் கொக்கி விழுந்ததும் திரும்பினார் பேராசிரியர் சுந்தரம்.
மனைவி ரஞ்சிதம் அவரின் பதிலுக்காய் காத்திருப்பதை முகம் காட்டியது. பேராசிரியரின் மனதில் குழப்பம். அதோடு கவலைவேறு.

கிட்டத்தட்ட ஐம்பது வயதுவரை தனக்காய் ஒன்றுகூட வேண்டுமென்று அடம்பிடிக்காத ரஞ்சிதம் ஏன் இன்று மட்டும் மாறிவிட்டாள்?

மனம் அலைபாய்ந்தபோது –

“போன வரு~ம் தீபாவளி நேரத்தில் என் தங்கச்சி குடும்பத்தோட இங்கு வந்தபோதும் நீங்க ஏதோ “கருத்தரங்கு” நடத்த மதுரை போயிட்டீங்க. இந்த வருசமும் இப்படி காலேஜிக்குப் போகணும்னு சொல்றீங்களே?... என் தங்கச்சிக்கு தீபாவளி நேரத்தில் தான் லீவு கிடைக்கும். அதனால் இன்றைக்கு மட்டும் லீவு போட்டுட்டு நீங்க வீட்ல இருக்கக்கூடாதா?” – ரஞ்சிதம் கெஞ்சினாள்.

“இங்கபாரு ரஞ்சிதம்………. என் இருபத்தைந்து வரு~ சர்வீஸ்ல என்றைக்காவது நான் அநாவசியமாய் லீவு போட்டிருக்கேனா? என் உடம்புக்கு முடியலைன்னாலும் வகுப்புக்குப்போய் பாடம் எடுத்திடுவேன். இப்போ செமஸ்டர் எக்ஸாம் வேற நெருங்கிட்டுது. பாடங்களை அவசரமாக முடிக்க வேண்டியதிருக்கிறது”.

“அதுசரிங்க இன்றைக்கு சனிக்கிழமைதான், லீவுதானே? இன்றைக்கும் வகுப்பு நடத்தப் போறேன்னு சொல்றீங்களே. என்றைக்காவது பாடம் நடத்தவிடாம உங்களை நான் தடுத்திருக்கேனா? இல்லியே! இன்றைக்குக் காலையில் 10 மணிக்கு என் தங்கச்சி ஹைதராபாத்லேருந்து வந்திடுவா. பிறகு சாயங்காலம் 3 மணிக்கு அவசரமாய் புறப்பட்டு கன்னியாகுமரி, திருவனந்தபுரம் போயிடுவாங்க. இந்தத் தடவை அவளுக்கு ஒருவாரம்தான் லீவு கிடைச்சுதா
ம். அவ வர்ற நேரத்தில் நீங்க இல்லைன்னா அவ என்ன நினைப்பா? அதனால ………”

“நீ சொல்றதும் சரி தான். ஆனா மாணவர்களையெல்லாம் ஸ்பெ~ல் கிளாசுக்கு வரச்சொல்லிட்டேன். அதான் பார்க்கிறேன்”.

“ஒரு நாள் வகுப்பு நடத்தலைன்னா என்னங்க?”.

“ரஞ்சிதம். நீ புரியாமல் பேசுறே. ஸ்டூடன்ஸை வகுப்புக்கு வரச் சொல்லிவிட்டு நான் போகாமல் இருந்தால் எப்படி? அது ஒரு வகை ஏமாற்று வேலைதான். அதனால……”

“நான் சொல்றதை என்றைக்காவது நீங்க கேட்டு இருக்கீங்களா? -  உங்களுக்கு ஒரு கொள்கை. ஒரு நியாய
ம் அதனால அடுத்தவங்க மனம் புண்படுமேன்னு நீங்க கொஞ்சமாவது யோசிக்கணும். எனக்கு சொந்தம்னு சொல்லிக்கிறதுக்கு இந்த ஒரே ஒரு தங்கச்சிதான் இருக்கிறா. அவள் வர்ற நேரத்தில்கூட நீங்க வீட்ல இல்லைன்னா….” 

ரஞ்சிதம் அழத்தொடங்கிவிட்டாள். மனதில் வருத்தமும் எரிச்சலும் முகாமிட்டு முகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.

பேராசிரியர் சுந்தரம் திகைத்துப் போனார். அன்பு மனைவி ரஞ்சிதமா இப்படி அடியோடு மாறிப்போனாள்?

அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
 
“இங்கப்பாரு கடமைதான் வாழ்க்கையின் உயிர்நாடின்னு உன்னை கைப்பிடிச்ச அன்றைக்கே உன்கிட்ட சொல்லியிருக்கேன். அதுபோல இன்றுவரை நடந்து வர்றது உனக்கு தெரியும். ஏற்கனவே மாணவர்போராட்டம், ஜாதிப் போராட்டம்னு நிறைய லீவு விட்டு பாடம் நடத்தாமல் இருக்குது. இரண்டு வாரத்தில் யூனிவர்சிட்டி பரீட்சை வேற நடக்கப்போகுது. அதனால……”

“நான் என்னதான் சொன்னாலும் நீங்க கேட்க மாட்டீங்க. உங்களுக்கு எப்பவும் காலேஜ்தான். இருபது வருசத்துக்கு மேல பாடம் சொல்லிக் கொடுத்து ஏதாவது பலன் இருக்குதா? இல்லியே! நீங்க கஷ்டப்பட்டு பாடம் நடத்தி வர்றீங்கன்னு ஏதாவது பரிசா தர்றாங்க…..? உடலை உருக்கி…. கத்திக்கத்தி….. உங்களுக்கு கிடைத்த பரிசு இருமல்தானே?…..”

“ரஞ்சிதம்…… அப்படியெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தா வாழ்க்கை ருசிக்காது”.

“இல்லைங்க… கணக்குப் போடாதனாலத்தான்….. உங்ககிட்ட நேரடியாக கேக்காததுனாலத்தான் …வாழ்க்கை ருசிக்கலை….”
 
“ரஞ்சிதம்” – கோபம் கொப்பளித்ததால் வார்த்தைகள் ஓடிப்போனது. பேராசிரியர் சுந்தரம் அதிர்ந்து, நிமிர்ந்தார்.

“நீங்க…. காலேஜ் காலேஜ்னு அலைஞ்சு திரிஞ்சதுனாலத்தான் நான் என் பிள்ளைகளை இழந்தேன். நீங்க வீட்டுக்கு வந்த பிறகும் மானேஜ்மெண்ட், அட்மினிஸ்டிரேசன்னு பெரிய புத்தகங்களோடு வாழ்க்கை நடத்திக்கிட்டிருந்தீங்க. பிள்ளைகளைக் கவனிக்க உங்களுக்கு எங்கே நேரம் இருந்தது? அதனாலத்தான் - அப்பா அடிச்சு வளர்க்காத பிள்ளைகள் இப்போ என்கூட இல்லாததனால்தான் நான் அழுறேன்”.

ரஞ்சிதம் பலமாய் வந்த அழுகையை நிறுத்த முடியாமல் தோற்றாள். தனது சேலைத்தலைப்பால் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு சமையலறைக்குப் போய்விட்டாள்..

பேராசிரியர் சுந்தரம் சிலையாய் நின்றார். பழைய எண்ணங்கள் மனதில் வந்து மின்னலிட்டன.

அன்று –

ஞாயிற்றுக்கிழமை.

பக்கத்து ஊரான அஞ்சு கிராமத்தில் - “இலக்கியவிழா” – கண்டிப்பாய் போக வேண்டும். மேடையில் பேராசிரியர் சுந்தரம் முழங்கப்போவதை டவுண் பஸ் முதுகு முதல் சலூன் கடை சுவர் வரை விளம்பரப்படுத்தியது.

இரவு 8 மணிக்குக் கூட்டம்.

கற்பில் சிறந்தவர்களைப் பற்றிய பட்டிமன்றத்தில் நடுவராய் இருக்கவேண்டும்.

ஏழு மணிக்கு ‘சர்ச் பஸ் ஸ்டாண்ட்’ பக்கம் வந்து பஸ்ஸ_க்காய் காத்து நின்றபோது அவசரமாய் ஓடிவந்த ஒருவன் அவரின் அமைதியில் அணுகுண்டைப் போட்டான்.

மகள் - பிருந்தா ஓடிப்போய்விட்டாள்.
 
பக்கத்து வீட்டு வேலையில்லாப் பட்டதாரியைக் காதலித்து,  - வீட்டில் சொல்லாமல் ஓடிவிட்டு – கடிதம் வேறு எழுதி வைத்துவிட்டாள்.

கல்லூரிப் படிப்பில் கால் வைப்பதற்கு முன் மகள் பிருந்தா காதல் படியில் ஏறி கரையும் சேர்ந்துவிட்டாள்.
 
புயலாய் வந்த செய்தி பேராசிரியரை நிலைகுலையச் செய்தது.

இது முடிந்து ஒரு மாதம் முடிவதற்குள் -

மீண்டும் பூகம்பம்.

ஒரே மகன் ரவிச்சந்திரன் திடீரென வந்து ‘இவள்தான் என் மனைவி’ என தன்னோடு படித்த ஒருத்தியை அறிமுகப்படுத்தி, தாலிகட்டிய விபரத்தைச் சொன்னான்.

பேராசிரியர் ஆத்திரப்பட்டார்…. “டேய் என்னடா….. பெத்தவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? நாங்கள் உனக்கு என்னடா குறை வச்சிட்டோம்? இப்படி எல்லார் முன்னாலேயும் என்னை தலைகுனிஞ்சு நிக்க வச்சிட்டியேடா….” சொல்லிக் கொள்ளாமல் வந்த சோகம் கண்ணீரை அள்ளித் தந்தது.

மனம் அதிகமாய் அழுததால் மிகவும் சோர்வாகிப் போனார்.

“அப்பா…. இப்போ என்ன நடந்திட்டது?. துக்க வீடு மாதிரி உக்கார்ந்து அழுறீங்க? உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க. உடனே நான் இங்கேயிருந்து போயிடுறேன். ஏற்கனவே என் மனைவியோட அப்பா அவர் வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்துட்டார். நான் தான் பிடிவாதமாய் இங்கே இவளை அழைச்சிட்டு வந்தே
ன், வந்த இடத்தில்……”

“டேய்….. வீட்டோட மாப்பிள்ளையாய் போயி நல்லா இரு. இங்க நாங்க இருபது வரு~மா வளர்த்தது எல்லாம் உனக்கு இப்போ ஞாபகம் இராது. பிருந்தா சொல்லமாப் போனா…. நீ சொல்விட்டுப் போ….. போங்க….. எல்லோரும் போங்க. டேய்….. ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்க. பெரியவங்களை. மதிக்கத் தவறின யாரும் உருப்பட்டதில்லை…. போடா போ…..”
கோபத்தின் சிகரத்தில் நின்றார் பேராசிரியர்.

ரஞ்சிதம் ஓடிவந்து மகனின் கையை பிடித்து அழுதாள்.

“ரஞ்சிதம் இங்கே வா…. டேய்….. வெளிய போடா….. கெட் அவுட்……” – கத்திய ஒலி ஹாலில் எதிரொலித்தது.

இதுதான் பழைய நிகழ்ச்சி.

இதையும் கொண்டுவந்து இப்போது முடிச்சுப்போடுகிறாள் ரஞ்சிதம்.

ஏன்?

நான் உறவுகளைக் கவனிக்கத் தெரியாதவனா?

பாசமே எனக்கு இல்லையா?

பேராசிரியர் தனக்குத்தானே கேள்விகேட்டு விடையளித்துக் கொண்டார். கவலை மனதை அரித்துத் தின்றது.

ரஞ்சிதம் நடத்திய திடீர்தாக்குதல் அவரின் எண்ணங்களை செயலிழக்கத் செய்தது.

சிறிதுநேரம் எதையோ யோசித்தவர் ரஞ்சிதத்திடம் நெருங்கி வந்தார்.

“நான் காலேஜீக்கு போய்ட்டு வர்றேன்…”. எனச் சொல்லிவிட்டு புறப்பட்டார்.

மாலை 5 மணி –

கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு வீடு வந்தபோது – ரஞ்சிதம் முகத்தில் மகிழ்ச்சி விடைபெற்று இருந்தது.

“ரஞ்சிதம் உன் தங்கச்சி வந்தாளா?” – என விசாரித்தபோது – பதில் வரவில்லை.

மௌனமே பதிலானது.

பிறகு –

“டீ…… கொண்டு வாயேன்…..”

-என பேச்சுவார்தையின் ஸ்டைலை மாற்றியபோது –

“என் தங்கச்சி அவள் புரு
னோட காலையில 10 மணிக்கே வந்துட்டா. முருகன் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போனேன். அவ மகள் பவித்ரா இப்போ எவ்ளோ வளர்ந்துட்டா….. நல்லா செகப்பா இருக்கா. பட்டுப்பாவடை கட்டித்தான் வந்தது. சின்னக்குழந்தையையும் கூட்டிட்டு வந்திருந்தா. மதியம் பாயாசத்தோடு சாப்பாடு வச்சிருந்தேன்….. ஆனா…. நீங்க இல்லாததைத்தான் அவள் ரொம்பவும் குத்திக்காட்டிப் பேசினாள். அவ புருனும் ரொம்ப வருத்தப்பட்டாரு… நான் உங்களைப் பற்றி ரொம்ப பெருமையாச் சொன்னேன்……”-சொன்னவள் மகிழ்ச்சியும் வருத்தமும் சேர்ந்த மொளனப்; புன்னகையைக் காட்டிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

பேராசிரியருக்கு தனது மனைவியின் செய்கை விசித்திரமாய் தெரிந்தது. வழக்கமாய் தொணதொணக்கும்; கலகலக்கும் ரஞ்சிதத்தின் குரல் இன்று அமைதிப்படையில் சேர்ந்து கொண்டதே…..!

கவலையோடு மேஜைக்கு அருகிலுள்ள நாற்காலியில் உட்கார்ந்தார். சில கடிதங்கள் பிரிக்காமல் இருந்தன. அன்றைய தபாலில் வந்தவை.

ஒரு கடிதத்தை பிரித்துப் படித்தபோது –

விழிகளை அகல விரித்தார்…..

“அன்புள்ள அப்பாவுக்கு” என ஆரம்பித்த கடிதம் அவர் செய்த அத்தனை உதவிகளையும் வரிவரியாய் விவரித்தது.

“அநாதைபோல் கிடந்த எனக்கு அறிவுரைகளும், பணமும், அறிவும் வழங்கி ஆளாக்கினீர்கள். விரைவில் எனக்குத் திருமணம். தங்களின் நல்லாசி வாங்க நேரில் வருகிறேன்…..”

                                                                                                                               இப்படிக்கு
                                                                                                                           தங்கள் மகன்
                                                                                                                               சீதாராமன்

யார் இந்த சீதாராமன்?

பழைய மாணவன்.

எட்டு வருடங்களுக்கு முன்னால் கல்லூரியில் பட்டப்படிப்பில் படித்தவன்தான் சீதாராமன்.

பேராசிரியர் சிந்தனையில் அவனைப்பற்றிய எண்ணங்கள் வந்து நின்றன. 

முகமெல்லாம் ஒரே மகிழ்ச்சி…. “ரஞ்சிதம்….. ரஞ்சிதம்…..” என அழைத்துக் கொண்டே வேகமாய் மனைவியை நோக்கி வந்தார்.

“காலையில் ஒரு கேள்வி கேட்டியே… ஞாபகம் இருக்குதா?… இருபது வரு
த்துக்கு மேல காலேஜ்ன்னு ஒரேயடியாய் அலைஞ்சி திரிஞ்சதுக்கு பரிசு என்ன? என்று கேட்டியே?... எனக்கு பரிசு கிடைச்சிருக்குது. இங்க பார் இந்த கடிதத்தைப் பார். சொந்த மகனும் மகளும் சொந்தத்துக்கே ‘டாடா’ காட்டிட்டுப்போன பிறகு எனக்கும் உனக்கும் மகன் கிடைச்சிருக்கான்.

மகிழ்ச்சியில் கண்ணில் நீர் அரும்ப மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

ரஞ்சிதம் அவரை அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
                                         – திருநெல்வேலி வானொலி நிலையம் ஒலிபரப்பியது.

3. விலை போன பின்…………




முடிவை மாற்றித்தான் ஆக வேண்டும்.

பள்ளியில், கல்லூரியில் வளர்த்த கனவை கலைத்துத்தான் ஆகவேண்டும். அலுவலக நண்பர்களின் கேலிப் பேச்சை சந்தித்துத்தான் தீர வேண்டும்.

ரமேஷ் புதிய முடிவுக்கு மாறினான்.

“வரதட்சணை வாங்கித்தான் கல்யாணம் செய்ய வேண்டும்”.

படிக்கும்போதே பாரதியார் கவிதைகளில் கரைந்தவன். பாரதிதாசனின் பாதையில் நின்றவன். சமுதாயப் புரட்சிக்காக குரல் கொடுத்தவன்.

ஆனால், இன்று–மாதம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கும் அலுவலக வேலை. பெயருக்குப் பின்னால் எம்.ஏ. பட்டம். அப்பாவின் சொத்தில் வாரிசுமூலம் ஒரு லட்சம் தேறும் நிலை. இருந்தாலும் ரமேஷ்க்கு திருப்தியில்லை.

ரமேஷ் கொஞ்சம் யோசித்து முடிவு பண்ணுடா! ஒருத்தர் சம்பளத்தில் இந்தக்காலத்தில் குடும்பம் நடத்த முடியாது. உனக்கு வர்றவ வேலை பார்க்கிற பெண்ணா இருந்தால் நல்லது. இல்லேன்னா நகை, வரதட்சணை, சொத்துபத்தோட வந்தா தாங்கிக்கலாம். என்னையே எடுத்துக்கோ! வெறுங்கையை வீசிட்டு வந்தவளை லட்சாதிபதி மாதிரி கட்டிக்கிட்டு இப்போ நான் படுற பாடு நாய்கூடபடாது. நான் சொல்றதைக் கேளு. இப்ப வந்திருக்கிற நாகர்கோவில் பொண்ணை முடிச்சிடு. நாஞ்சில் நாட்டுக்காரங்க, நல்லாக் குடுப்பாங்க….!”

அலுவலக நண்பரான ராஜாமணி அண்ணாச்சி சொன்னதும் மெல்லியதாய் ஆசை இழையோடியிருந்தது.

நாகர்கோவில் சென்று லட்டு ருசி பார்த்து காபி சுவைத்து பெண் பார்த்து, நகை ரொக்கம் பேசி, நாள் குறித்து நிச்சயதார்த்தம் முடித்து அட்வான்ஸ் வாங்கி பொன்னுருக்கி அழைப்பிதழ் விநியோகித்து தாலி கட்டுவதற்குள் இரண்டு மாதங்கள் இறக்கை கட்டிப் பறந்தன.

கல்யாணம் முடிந்து மறுநாள் விடியற்காலை.
 

“என்னங்க…. விருந்துக்குப் போகணும். இன்றைக்கு எங்க மாமா வீட்டுக்குப் போவோம்”.

“என்ன அவசரம்….. நான் ஏற்கனவே எங்க அஞ்சு கிராமம் அத்தை வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டேனே”.

“இல்லீங்க…. எங்க அகஸ்தீஸ்வரம் மாமாதான் நம்ம கல்யாணத்துக்கே முக்கிய காரணம். இந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலி எங்க மாமா பரிசா தந்தாங்களே மறந்துட்டீங்களா?”.

சிறிது நேர அமைதி.

“என்ன யோசிக்கிறீங்க?”. முதல் விருந்தே உங்க வீட்லதான் மாமான்னு நான் ப்ராமிஸ் பண்ணிட்டேன்”.

வேறு வழியில்லாமல் சம்மதித்தான் ரமேஷ்.

“என்னங்க……”

“ம்…..”

“எந்த சூட்கேஸ் கொண்டு போகணும்? எங்க மெட்ராஸ் அண்ணன் வாங்கித் தந்தாங்களே….. அதைத்தானே…..?”

இருக்கிற சூட்கேஸ்களில் அதுதான் சிறந்தது. ஒத்துக்கொண்டான்.

“எங்க அப்பா வாங்கித் தந்த புது ஸ்கூட்டர்ல முதல் விருந்துக்கு போறதுதான் நேர்த்தியா இருக்கும்”.

தலையாட்டினான். புறப்பட்டார்கள்.

கவிதாவின் மாமா வீட்டில் தடபுடலான உபசரிப்புகள். பணத்தின் ‘திமிர்’ சிலவேளைகளில் பேச்சாக எட்டிப்பார்த்தது.

“கவிதா…. உங்க மாமாவுக்கு ஒரு வருத்தம். உன் மாமனார் வீட்டு ரிசப்~னை ஏதாச்சும் மண்டபத்துல வச்சு இருந்திருக்கலாம். முட்டு சந்து மாதிரி அவங்க வீட்ல வச்சதால் நம்ம கார்கூட நுழைய முடியலையே!” அத்தை அங்கலாய்த்தாள்.

விருந்து முடிந்து வீட்டுக்கு வந்தார்கள். மாமனார் தந்த ஸ்கூட்டர் நன்றாகத்தான் இருந்தது.

“என்னங்க……. வாட்டமா இருக்கீங்க…..?” என்மீது கோபமா?”.

“இல்லை”.

சில நாட்கள் நகர்ந்தன.

“கவிதா…. ஆபீஸ_க்கு கிளம்பணும். எனக்கு பேன்ட், சர்ட் எடுத்துவை”.

“எங்க வீட்ல எடுத்துத் தந்தாங்களே….. அந்தப் ப்ரவுன் கலர் பேன்ட்டை எடுத்து வைக்கட்டுமா?”.
“….. ….. …..”

“சீக்கிரம் சொல்லுங்க. அடுப்பில் எண்ணெய் கொதிக்குது”.
“….. ….. …..”

“ஏங்க…. உங்களைத்தானே…..”

“அந்த பேன்ட் வேண்டாம். கறுப்பு கலர் பேன்ட் போதும்”.

“அப்போ சட்டை? நாம் விருந்துக்குப் போனப்ப எங்க சித்தப்பா பிரசன்ட் பண்ணினாங்களே……”.

ரமேஷ்க்கு எரிச்சல் வந்தது. வெளிக்காட்ட முடியவில்லை. ஏதோ பதில் சொன்னான்.

“இன்னிக்கு மதியச் சாப்பாடு எங்க அம்மா ஆசையாய் வாங்கித் தந்த டிபன் கேரியர்ல வச்சிருக்கேன்”.
 

கோபம் பொங்கி வந்தாலும் வழியாமல் அடங்கிப்போனது. சாப்பாடு எடுத்துக்கொண்டான்.

கவிதாவுடன் தொடங்கிய வாழ்க்கை ஒரு வாரம்கூட நிரம்பவில்லை.

அன்று, ஞாயிற்றுக்கிழமை.

டி.வி.யில் சினிமா தொடங்கும் நேரம்.

முதல்ல பிளாக் அன்ட் ஒயிட்னாங்க. நான்தான் கலர் டி.வி. வேணும்னு பிடிவாதம் பிடிச்சு வாங்கினேன். கலர் ரொம்ப நல்லா இருக்குதில்லே…..”.

“ம்…..”.

“நான் சொல்லவே மறுந்துட்டேங்க….. கல்யாணத்தோட ரொக்கம் நாற்பதாயிரம் தந்தாங்கல்லவா…..? அதை நாகர்கோவில் சவுந்தர்யா பைனான்ஸ்ல பிக்சட் டெபாசிட்ல போட்ருங்க. எங்க சின்ன மாமாதான் நடத்துறார்.

“சரி…. சரி…. வாசல்ல ஏதோ வேன் சத்தம் கேட்குது போய்ப் பாரு”.

பார்த்தவள் மகிழ்ச்சியில் கூத்தாடினாள்.

“எங்க வீட்லேருந்து மெத்தை கட்டில் அனுப்பியிருக்காங்க. ஆர்டர் கொடுத்தது. கல்யாணத்துக்கு வராம இப்பதான் வந்திருக்கு”.

“இரவு…..”

“என்னங்க….! எங்க வீட்லேருந்து வந்த மெத்தையை கட்டில்ல போட்டிருக்கேன்!”

ஆசையாய்த் தழுவிக்கொண்டாள்.

அவனுக்கு மெத்தை முள்ளாய்க் குத்தியது.


Post a Comment

புதியது பழையவை

Sports News