மெய்ப்பொருள் காட்டும் பட்டினத்தார் வரலாறு.

 


மெய்ப்பொருள் காட்டும் 

பட்டினத்தார் வரலாறு. 

- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,

நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், 

திருநெல்வேலி.


கொரோனா கண்டும் மாறாத மனிதர்கள் கூட பட்டினத்தார் வரலாற்றை படித்தால் மாறுவார்கள் .. தான் மட்டுமே நிலையாக இருக்க போவதாக நினைத்து கொண்டு மனசாட்சி மறந்து, அறமில்லாமல் பணத்தை குவிக்கும் மனிதர்களை இந்த பேரிடர் காலங்களிலும் பார்த்து கொண்டிருக்கிறோம்... நீர்க்குமிழி  போன்ற இவ்வாழ்க்கை ஒரு பெருங்காற்றுக்குத் தங்காதே என்று அறியாமல் வாழும் மனிதர்களை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.. 

கோடி கோடியாக பணமும் பொருளும் சம்பாதித்தாலும் உலகத்தை விட்டு நீ போகும் போது உன்னுடன் காதற்ற ஊசி கூட வராது என்று உலகிற்கு உணர்த்தியவர் பட்டினத்துஅடிகள்.

அவரது வாழ்க்கை பன்முகத்தன்மை கொண்டது.. பெரும்செல்வம், வணிகம், பக்தி, இலக்கியம், பாடல், அரசாட்சி முறைமை, குடும்ப வாழ்க்கை, உறவு, அறம், அநீதி, ஊழ்வினை பயன் என அனைத்தையும் கட்டுகிறது. 

தனக்கு மகனாக பிறந்த ஈசன் தனக்கு உணர்த்திய "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’' என்ற ஒற்றை வரியில் வாழ்வின் நிலைமையை உணர்ந்து ராஜ வாழ்க்கையை துறந்தவர் '‘பட்டினத்தார்’'. உலகிற்கு உண்மையையும், அறத்தையும் உணர்த்த செல்வங்களை துறந்து துறவியானவர். பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டிணத்தில் பிறந்து சென்னை திருவொற்றியூரில் கடற்கரை நகரில் ஆடி உத்திராடம் நாளில் முக்தியடைந்தவர்... அவரது முக்தியடைந்த தினத்தில் அவரை மனதார நினைத்து பார்த்து இந்த கட்டுரையை எழுதுகிறேன். 

நாகை மாவட்டம் "திருவெண்காட்டில்" அவதரித்து இருந்தாலும் சென்னை – திருவொற்றியூர் கடற்கரை ஓரம் மீனவர்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தான் அமைந்துள்ளது பட்டினத்தார் ஜீவசமாதி திருக்கோயில். அதை சமாதி திருக்கோயில் என்பது கூட பொறுத்தமானது அல்ல. ஏன் எனில் பட்டினத்தார். ஸ்துல உடலுடன் மறைந்தவர் அல்ல. தனது உடலை சிவலிங்கமாக ஆக்கிவிட்டு முக்தி அடைந்தவர்.

சென்னை திருவொற்றியூரில் கடற்கரையில் இருக்கும் அவரது ஜீவ ஆலயத்திற்கு நான்கு வருடங்களுக்கு முன்பு சென்றேன். அங்கிருந்த பெரியவர் கேட்டார் , எங்கிருந்து வர்ற தம்பி .. திருநெல்வேலியில் இருந்து வருகிறேன் என்றேன். அங்கிருந்து சென்னை வந்த நீ இந்த கடற்கரை ஓரம் உள்ள இந்த கோவிலுக்கு வர காரணம் என்ன என் கேட்டார்.. சோழ பேரரசுக்கு உதவும் அளவு பொருள் படைத்த தனவந்தன் மெய்பொருள் உணர்ந்து இங்கு கோவில் கொண்ட கதை வரை கூறினேன்..  

நேற்றிருந்தோர்   இன்று   இல்லை,  கண்ணுக்குக்   கண்ணெதிரே உடல்களெல்லாம்  கட்டையில்  வேகக் கண்டும் இந்த உடலை நிரந்தரமானதென்று  எண்ணி  நிரந்தரமாக   இருப்போமென்று   எண்ணி  ஆங்காரம் கொள்ளும் மனிதனின் நிலை கண்டு அன்றே தெளிவாக பாடியவர் .... பெண்ணாசை மனதை அணு அணுவாய்ச் சித்திர வதை செய்கிறதே. ‘ஆவி உண்பேன்’ என்று என்னை அலைக்கழிக்கின்றதே’

“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;

சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே”

காமக் குரோதம் கடக்கேனே என்குதே

நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே

அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே

என்று மனித மனதின் சுற்றி திரியும் நிலையை தன் பாடல் மூலம்  எடுத்துரைக்கிறார். 

பதினோராம் திருமுறையில் இவரது பெயர் பட்டினத்தடிகள் எனக் காட்டப்பட்டுள்ளது. எனினும், "பட்டினத்தார், பட்டினத்துப் பிள்ளை, பட்டினத்துப் பிள்ளையார், திருவெண்காட்டு அடிகள்"  என்னும் பெயராலும் இவர் குறிப்பிடப்படுகிறார். இவரது அவதாரம் செய்தது புகார்ப்பட்டினம், பெரிய பட்டணம் ஆதலால் இவரைப் 'பட்டணத்தார்' எனவும் வழங்குகின்றனர்.

இளமை  முதலே  இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச்

சொல்லப்படுகின்றது.  வானுலக  தேவர்களில்  ஒருவரான  குபேரன் தான். இப்பூவுலகில்  பட்டினத்தாராக   அவதரித்தார்  என்று  திருவெண்காட்டுப் புராணம்  கூறும்.

கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய “ஞானம் பிறந்த கதை” அர்த்தமுள்ள இந்து மதத்தின் முதல் பாகமாகும். அதில் தமக்கே உரிய சிறப்பான நடையில் பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றை அழகுற எழுதியுள்ளார். 

காவிரிப் பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த நகரம். பிற்காலச் சோழர்கள் காலத்தில் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் சிவநேசர் என்னும் வணிகர் ஞானகலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.  திருவெண்காட்டு ஈசனிடம் மிகுந்த பக்தி செலுத்திய அந்த வணிகருக்குப் பிள்ளை பிறந்த போது திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமான் என்ற பெயரையே வைத்தார்.  திருவெண்காடர் எனவும் அழைக்கப்பட்டார். சிவநேசர் வணிகர்களிலேயே பெரு வணிகர் என்பதோடு பெரும்பொருளும் திரட்டி மன்னர்களுக்குச் சமானமான மாளிகையில் மிகவும் வசதிகளோடும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்தார்.  மன்னரும் அவரை மதித்துப் போற்றி வந்தான்.  ஆகவே திருவெண்காடருக்கு நல்ல வசதியான வாழ்க்கை வாய்க்கப் பெறவே அவரும் மிகவும் ஆனந்தமாகவே வாழ்ந்து வந்தார். கப்பல் வணிகம் மூலம்  பெரும் பொருள் ஈட்டிய சிவநேசர் காலமானார். 

திருவெண்காடருக்கு உரிய  வயதில் அவரது தாய்  ஞானகலாம்பை  திருமணம் முடித்து வைக்க நினைத்தார், அதன்படி சிதம்பரச் செட்டியார் சிவகாமியம்மையின் புதல்வியான சிவகலை என்பவரை திருவெண்காடருக்கு மணமுடித்தார்.

ஒரே ஒரு சகோதரி இருந்தாள். சகோதரியும் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள்.  திருவெண்காடருக்கு சிவகலை என்னும் பெண்ணரசி மனைவியாக வாய்த்தாள்.  அவளுடன் நல்லறம் நடத்தி வந்தார். ஆனால் குழந்தைப் பேறே இல்லாமல் இருந்தது.  ஆகவே அங்கிருந்து திருவிடைமருதூர் சென்று ஈசனை வணங்கி விரதம் இருந்து வந்தார்.

அவ்வூரிலே சிவசருமர் என்னும் அந்தணர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார்.  அன்றாட வாழ்க்கைக்கு உரிய பொருள் இல்லா நிலையில் இருந்த அவரிடம் ஈசன் கருணை கொண்டு தாம் ஒரு குழந்தையாக அவர் முன் தோன்றுவதாகவும், “மருதவாணன்” என்ற பெயரைத் தமக்கு இட்டுத் தம்மை காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து திருவிடைமருதூர் வந்திருக்கும் திருவெண்காடர் என்னும் வணிகரிடம் கொடுக்குமாறும், அதற்கு அவர் பொருள் தருவார்;  அந்தப்பொருளை வைத்து வறுமையிலிருந்து மீளலாம் என்றும் கூறுகின்றார்.  அவ்வாறே ஒரு குழந்தையாக சிவசருமர் முன்னே தோன்ற, குழந்தையைக் கண்ட சிவசருமருக்கு அதைப் பிரிய மனம் இல்லை எனினும் வேறு வழியின்றித் திருவெண்காடரிடம் சென்று , ஈசனின் ஆணையைக் கூறிக் குழந்தையைக் கொடுக்கிறார்.  ஈசனின் ஆணை என்றதும் திருவெண்காடரும் குழந்தையை வாங்கிக் கொண்டு சிவசருமருக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து அனுப்பி விடுகிறார்.  குழந்தைக்கு மருதவாணர்  என்ற பெயரையே நிலைத்திருக்குமாறு செய்து குழந்தையோடு காவிரிப் பட்டினம் திரும்புகிறார்.

மேற்சொன்ன வரலாறு வேறுவிதமாகவும் கூறப்படும்.  செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்கு ஞானம் கிட்ட வேண்டியும், மண்ணுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டியும் ஈசனை வேண்ட அவ்வாறே மண்ணுலகில் பிறக்க அருளுகிறார் ஈசன்.  ஆனால் குபேரனாயிற்றே.  செல்வத்துக்கு அதிபதி அல்லவா?  ஏழைக்குடும்பத்திலே பிறக்க முடியாது என்பதால் காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள மிகப் பெரிய செல்வக் குடும்பத்தில் பிறக்கிறான் குபேரன். திருவெண்காடு சென்று பெற்றோர் பிள்ளைவரம் வேண்டிய பின்னர் பிறந்ததால் திருவெண்காடர் என்ற பெயரை வைக்கின்றனர்.  ஒரே சகோதரி இருக்கிறாள்.  திருவெண்காடருக்கு ஐந்து வயதாக இருக்கையில் தகப்பனார் இறந்து போக இவர் அதுமுதல் வணிகத்தைக் கவனித்து வருகிறார்.   

ஒருநாள் இவர் கனவில் ஈசன் தோன்றித் திருவெண்காட்டிற்கு வரும்படி பணிக்க அங்கே செல்கிறார்.  அங்கே ஈசன் இவரை ஒரு அந்தணர் உருவில் வந்து சந்தித்துச் சிவ தீட்சை கொடுத்துவிட்டு ஒரு சம்புடத்தையும் கொடுக்கிறார்.  அந்தச் சம்புடத்துக்குள்ளாக விநாயகர் சிலையும், ஒரு சிவலிங்கமும் இருக்கவே நாள் தோறும் அதற்குப் பூஜைகள் செய்து வருகிறார்.  தக்க பருவம் வந்ததும் சிவகலையைத் திருமணம் செய்து கொள்கிறார்.  நாட்கள் கடக்கின்றன.  குழந்தை பிறக்கவில்லை.

அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் அந்தணத் தம்பதியருக்கு வறுமை பொறுக்க முடியாமல் இருந்து வந்தது.  சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம் கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும், சிவசருமர் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெருவணிகராய் உள்ள திருவெண்காடரிடம் சேர்ப்பிக்குமாறும் அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் வறுமை தீரும் எனவும் கூறவே விழித்தெழுந்த சிவசருமர் மறுநாள் அவ்வாறே நடக்கக் குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடரிடம் கொடுக்க அவரும் ஈசன் ஆணை என அறிந்து குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்குப் பொருள் கொடுத்து உதவுகிறார்.  மருத மரத்தடியில் கிடைத்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகிறார்.

மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை.   பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார்.  வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார்.  வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர்.  ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ  ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான்.  கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார்.  அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது.  இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்!  எதைக்கொண்டு போகப் போகிறோம்.  எதுவும் இல்லை.

அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார்.  வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது.  அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர்.  இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர்.  தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார்.  அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார்.  இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர்  ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் கீழ்க்கண்ட பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே

அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன்

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ

மெய்யிலே தீமூட்டு வேன்

அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு

வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள

தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ

மானே எனஅழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்

கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள

முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்

மகனே எனஅழைத்த வாய்க்கு

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென்இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்

ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்

குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்

கருதி வளர்த்தெடுத்த கை

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்

வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்

உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்

தன்னையே ஈன்றெடுத்த தாய்

வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்

நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க

எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்

இப்படி அவர் பாடியதும் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.

துறவை மேற்கொண்ட பட்டினத்தார் அங்கேயே இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்து ஊர் ஊராகச் சென்று ஈசனைத் தரிசிக்க ஆரம்பித்தார்.  அவ்வாறு செல்கையில் உஜ்ஜையினி மகாகாளேஸ்வரர் கோயிலில் தன் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊருக்கு வெளியே வந்த பட்டினத்தார் அங்கிருந்த காட்டுப் பிள்ளையார் கோயிலில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  அவ்வூரில் பத்திரகிரியார் என்னும் அரசன் ஆண்டு வந்தான்.  அரண்மனையில் செல்வம் மிகுந்திருந்தது;  இது காட்டின் கொள்ளையர்களைக் கவர்ந்தது.  அவர்கள் அரண்மனைக்குக் கொள்ளையடிக்கச் சென்றனர்.  செல்கையில் கொள்ளை வெற்றிகரமாய் முடிந்தால் காட்டுப் பிள்ளையாருக்குக் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டு சென்றனர்.  அவ்விதமே கொள்ளை வெற்றியாய்  முடியவே அவ்வழியே சென்ற கொள்ளையர் பிள்ளையாருக்கென ஒரு விலை உயர்ந்த முத்துமாலையைக் காணிக்கைக்கென எடுத்துக் கோயிலில் பிள்ளையார் சந்நிதி முன் வீசிவிட்டுச் சென்றனர்.  அந்த முத்துமாலை அங்கே தியானம் செய்து கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் போய் அழகாய் அமர்ந்து கொண்டது.

கொள்ளையரைத் துரத்தி வந்த அரண்மனைக் காவலர் பிள்ளையார் கோயிலில் கழுத்தில் முத்து மாலையுடன் வீற்றிருந்த பட்டினத்தாரிடம் இது எப்படிக் கிடைத்தது என வினவ, நடந்தது எதையும் அறியாத பட்டினத்தார் பதில் சொல்ல முடியாமல் தவிக்க, காவலர்களோ, இவரே கொள்ளைக் கூட்டத் தலைவர்; இப்போது ஏதும் அறியாதது போல் வேஷமிடுகிறார் என நினைத்து அரசரிடம் சென்று நடந்ததைச் சொல்கின்றனர்.  மன்னனும் விசாரிக்கப் பட்டினத்தார் எதுவும் சொல்லவில்லை.  உடனே மன்னனுக்குக் கோபம் வந்து, “கள்வனைக் கழுவில் ஏற்றுக!” என்று ஆணையிட்டார்.  கழுமரம் தயார் செய்யப் பட்டது,  பட்டினத்தாரும் கழுவில் ஏற்றப் பட்டார். கழுவில் ஏற்றப்பட்ட நிலையிலும் மனம் தளராது, “விதியின் வலிமையை எண்ணி என் செயலாவது யாதொன்றுமில்லை, இனி தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்” எனத் தொடங்கும் பாடலைப் பாடக் கழுமரம் பற்றி எரிந்தது,  இதை அறிந்த அரசன் பட்டினத்தாரின் மகிமையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டான்.

அரசனைக் கண்ட பட்டினத்தாருக்கு அவனும் ஞான வழியில் செல்லப் பக்குவம் அடைந்திருப்பதும், அவன் மனைவி அவனை ஏமாற்றுவதும் தெரியவரவே அதை மன்னனுக்குச் சூசகமாக உணர்த்தினார். மன்னனும் மனைவியைச் சோதித்துப் பார்த்து அவள் தன்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, அரச வாழ்க்கையைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக மாறி அவரைப் பின் தொடர்ந்தார்.  ராணியோ இறந்துவிடுகிறாள்.  அவள் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து ராஜா பத்திரகிரியாரையைச் சுற்றிச் சுற்றி வருகிறாள்.  பட்டினத்தாரும் பத்திரகிரியாரும், திருவிடைமருதூர் வந்தடைகின்றனர்.  அங்கே கோபுர வாசலில் பிச்சை எடுத்து பத்திரகிரியார் தாமும் உண்டு தம் குருவுக்கும் உணவு கொடுத்து வருகிறார்.  தம்மைச் சுற்றி வந்த நாய்க்கும் பத்திரகிரியார் உணவிட்டு வந்தார்.  அப்போது ஒரு நாள் பட்டினத்தாரிடம் ஒரு சித்தர் வந்து பிக்ஷை கேட்க, பட்டினத்தார் சிரித்த வண்ணம், “நானோ சந்நியாசி, என்னிடம் கொடுக்க ஏதுமில்லை.  அதோ இருக்கிறானே என் சீடன்.  சம்சாரி. சோற்றுச் சட்டி மட்டுமில்லாமல் கூடவே ஒரு நாயையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.  அவனைக் கேளுங்கள்.” என்று கை காட்டி விடுகிறார்.

இதை அந்தச் சித்தர் வாயிலாக அறிந்த பத்திரகிரியார் ஆஹா, சந்நியாசியாக மாறிய எனக்கு இந்தச் சோற்றுச் சட்டியும், நாயும் அல்லவோ சம்சாரியாக்கிவிட்டது.”  அடுத்த கணம் சோற்றுச் சட்டியைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார் பத்திரகிரியார்.  அதன் ஒரு துண்டு நாயின் தலையில் வேகமாய்ப் படவே நாய் இறந்து விடுகிறது.  அதைக் கண்ட பத்திரகிரியார் திகைத்து நிற்க பட்டினத்தார் தெளிவு படுத்துகிறார்.   பத்திரகிரியாரின் மனைவியே அந்த நாய் எனவும், இப்போது அவள் பாவம் தீர்ந்துவிட்டதென்றும், அடுத்த பிறவியில் நல்லதொரு அரசகுடும்பத்தில் பிறந்து மீண்டும் உன்னை நாடி வருவாள்.” என்று சொல்கிறார்.

அதன்படியே அந்தப் பெண் தன் தவறை உணர்ந்து வருந்தியதாலும் நாய்ப் பிறவி எடுத்ததாலும் காசிராஜனுக்கு மகளாய்ப் பிறக்கிறாள்.  பேரழகு வாய்ந்த பெண்ணாள் வளர்கிறாள்.  அவளைத் திருமணம் செய்து கொள்ள மன்னாதி மன்னர்களும், இளவரசர்களும் போட்டி போட்டனர்.  காசிராஜனும் மகளுக்கு மணமகன் தேடவேண்டிச் சுயம்வரம் நடத்த ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான்.  ஆனால் அந்தப் பெண்ணோ சுயம்வரத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்தாள்.  தான் வேறொருவருக்குச் சொந்தமானவள் என்றாள்.  திருவிடைமருதூர் குறித்துக் கூறி அங்கே ஈசனோடு ஐக்கியமாகி இருக்கும் பத்திரகிரியாரைக் குறித்துச் சொல்லி அவரிடம் தன்னைச் சேர்ப்பிக்கச் சொல்கிறாள்.  மன்னன் மகளை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் வந்து சேர்கிறான்.  பத்திரகிரியாரைத் தேடிக் கண்டு பிடிக்கிறான்.  தன் பெண்ணை அவரிடம் ஒப்படைத்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான்.

காசிராஜன் மகளும் தங்களின் அடிமையாகிய இந்த நாய் மீண்டும் தங்கள் திருவடி தேடி வந்திருக்கிறது என்று அவர் பாதம் பணிந்தாள். அவளுக்குத் தன் பூர்வ ஜன்ம நினைவுகள் மறையவே இல்லை என்பதைக் கண்டார் பத்திரகிரியார்.  பத்திரகிரியாரோ சிவஞானத்தில் பரிபூரணமாக ஐக்கியமாகிவிட்டார்.  அவர் இது என்ன புதுத் தொல்லை என நினைத்த வண்ணம் தன் குருநாதரான பட்டினத்தாரைப் போய்ப் பார்த்து, “குருவே,  இது என்ன?? நாய்க்குப் பிறவி ஞானம் வரலாமா?  மங்கையாய்ப் பிறப்பெடுத்து வந்திருக்கிறதே, “ என வினவ, “இதுவும் ஈசன் செயல்,” என்று புரிந்து கொண்ட பட்டினத்தார், ஈசன் திருவருளை நினைந்து வேண்ட, அப்போது தோன்றிய பெரும் ஜோதியில், அந்தப் பெண் மட்டுமில்லாமல் பத்திரகிரியாரும் சேர்ந்து மறைந்தார்.  இருவரும் சிவஞானப் பெரும் ஜோதியில் ஐக்கியம் ஆனார்கள்.

தன் சீடனுக்கு விரைவில் முக்தி கிடைத்ததை நினைத்து பட்டினத்தார் தனக்கும் முக்தி கொடுக்குமாறு ஈசனை வேண்ட, ஈசன் அவரிடம் ஒரு கரும்பைக் கொடுத்தார். அதன் நுனி இனிக்கும் இடத்தில் அவருக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறினார்.  அந்தக் கரும்பை எடுத்துக் கொண்டு பட்டினத்தார் மீண்டும் திருவெண்காடு, சீர்காழி போன்ற பல தலங்களுக்குச் சென்றார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை.

சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:

1)கோயில் நான்மணிமாலை

2)திருக்கழுமல மும்மணிக்கோவை

3)திருஏகம்பமுடையார் திருவந்தாதி

4)திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

5) திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

பின்னர் அவர் திருவொற்றியூர் வந்தார். அங்கே தான் கரும்பு இனித்தது.  இங்கேயே தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு இருந்த சிலரை அழைத்துத் தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள்.  மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார்.  முக்தியும் பெற்றார்.  பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம்  காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். இது நகரத்தார் சமூகத்தினரின் முக்கியமான கோயிலாகவும் விளங்கி வருகிறது.

சிவநேசர் – ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில்பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப்பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது.திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணிகக் குடும்பம்என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும்மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார்.

அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார்என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்துஇல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில்திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர்என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர்ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான்என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார். அவன் வளர்ந்துபெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வரஅனுப்பினார்.

அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டுவந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர்ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழைஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத்துணுக்கில் இருந்த “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” எனஅதில் எழுதியிருப்பதைக் கண்டு, அலறி, உள்ளம் துடிக்க, அறிவு புலப்பட்டு,அத்தனை செல்வங்களையும் தன் கணக்குப்பிள்ளை “சேந்தனிடம்”ஒப்படைத்து, “இவற்றை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடு” எனச் சொல்லிதுறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார்.

அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணிஅவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடையதமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு”தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்’ எறு கூறிவிட்டுபட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டுஅவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்றுசொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள்என்று மதிக்கத் தொடங்கினார்கள்

 “காதற்ற  ஊசியும்  வாராதே காணும் கடைவழிக்கே” பட்டினத்தாரின்

இந்த  வாசகமும்  பாடலும்  புதுச்சேரி  கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாய் பதிக்கப்பட்டு உலக நிலையாமையை உணர்ந்து நடக்க வேண்டுகிறது. இந்தத்  துறவு  நிலை  வருவதற்கு முன் தன் மனம் இருந்த நிலையை

பொருளாசை,   பெண்ணாசை,   வித்தையாசை  என்று  மனம்   ஆசையின் வாய்க்கப்பட்டு   அலைக்கழிப்புற்ற   நிலையை   அழகிய   கண்ணிகளாகப் பாடுகின்றார்.

“அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா

பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா”

“மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா”

“மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா”

“பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே”

“மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே;

திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே”

“வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;

சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே”

“மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே

சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே”

“கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே

செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே”

     இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு

அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார்.

“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;

சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே”

காமக் குரோதம் கடக்கேனே என்குதே

நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே

அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே

                                                                                       -----என்று பாடுகிறார். 

புரட்சிகரமாக இன்று கவிதைகள் படும் பலருக்கும் முன்னோடியாக பட்டினத்தடிகளின் பாடல்கள் விளங்குகின்றன.. எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட வாழ்வியல் தத்துவங்களை எளிமையாக உணர்த்தும் அவரது பாடல்கள்.. இன்று நாம் கொண்டாடும் நட்சத்திர கவிஞர்கள் அனைவருக்கும் மூலமாக இருப்பது பட்டினத்தடிகளின் பாடல்களே.. வாழ்க்கையை உணர பட்டினத்தார் வரலாறையும், அவரது பாடல்களையும் படித்தால் போதும். 

எளிமையும் வாழ்வியல் தத்துவமும் கொண்ட அவரது பாடல் வரிகளில் சிலவற்றை பார்ப்போம் : 

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே

ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி

நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு

தம்மதென்று தாமிருக்கும் தாம்.

மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து

வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்

பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை

பித்தானால் என்செய்வாள் பின்.

ஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்

அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்

நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி

என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே

நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு

பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை

அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை

அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை

வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு

வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு

நெஞ்சே உனக்குபதேசம் இதே...

"நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்

புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே"


                                                               --------------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News