திருச்செந்தூர் முருகன் - மாசித் திருவிழா 2019 - நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டுரைத்தொடர் 10

திருச்செந்தூர் முருகன் மாசித் திருவிழா - 2019 
நெல்லை கவிநேசன் - சிறப்பு கட்டுரைத்தொடர்
 [Website:www.nellaikavinesan.com, Email: nellaikavinesan25@gmail.com]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா 10- ம்நாள் நிகழ்வுகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 10.02.2019 முதல் 21.02.2019வரை 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருச்செந்தூர் மாசித்திருவிழா பத்தாம் நாள் [19.02.2019] திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நிகழ்வுகள்.






இதனை முன்னிட்டு “திருச்செந்தூர் முருகன்” என்னும் தலைப்பில் நெல்லை கவிநேசன் வழங்கும் சிறப்பு கட்டுரைத்தொடர் வெளியிடப்படுகிறது.  

உள் பிரகாரம் (மகா மண்டபம்) 


பஞ்சலிங்க தரிசனம்
அர்த்த மண்டபத்தின் வலதுபுறத்தில் சிறிய நுழைவு வாயில் உள்ளது. அதன் வழியாக உள்ளே சென்று ஐந்து சிவலிங்கங்களைத் தரிசிக்கலாம். இதனைப் பஞ்சலிங்கம் என்று அழைப்பார்கள். இந்த ஐந்து சிவ லிங்கங்களையும் முருகப்பெருமான் தரிசித்த சிறப்புண்டு என்பதால் இந்தப் பஞ்சலிங்க தரிசனம் இன்றும் சிறப்புமிக்க ஒன்றாகவே கருதப்படுகிறது.

சண்முகர்
ஷடானனம் த்விஷண்ணேத்ரம்
     வித்ருமாபம் த்விபாதகம்
ஸக்திம் பாணம்ச கட்கம்ச
      சக்ரம் பாஸ ததா(அ)பயம்
வஜரம் தநுஸ் ச கேடம் ச
    த்வஜாக்குஸ வராந்விதம்
வஜ்ர ப்ரவாள வைடூர்ய
      ப்ரத்யும்ந மகுடாந் விதம்
ரத்நாத்யாபரணைர் யுக்தம்
      திவ்ய கந்தாறுலேபனம்
வல்லீ ஸேநா ஸமாயுக்தம்
      ஷண்முகம் ச விபாவயே
- என ஷண்முகர் த்யான சுலோகம் குறிப்பிடுகிறது.
 
ஆறுமுகங்களும், பன்னிரண்டு கண்களும், இரண்டு கால்களும், வலது கரங்களில் சக்தி, பாணம், கட்கம், சக்கரம், பாசம் ஆகிய ஐந்து ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு ஆறாவது கை வரம் கொடுக்கும் கையாகவும் திகழ்கிறது. இடது கரங்களில் வஜ்ராயுதம், தனுசு, கேடயம், கொடி, அங்குசம் ஆகிய ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு ஆறாவது கை கீழ்நோக்கி அமைந்து வரம் வழங்கும் கையாக விளங்குகின்றது. ஒளிவீசக்கூடிய ரத்தினம், வைர, வைடூரியம், கிரீடம் தலையில் அணிந்துகொண்டு சந்தன மலையில் வள்ளி சேனா மனோகரனாக பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார் என்பது அந்த சுலோகத்தின் விளக்கமாகும். இவரைச் ‘செந்திலாண்டவர்’ என்பர்.
 
திருப்புகழில் முருகப் பெருமானின் ஆறுமுகங்களின் சிறப்பு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 
“ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே
 ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
 கூறும்அடி யார்கள்வினை தீர்த்தமுகம் ஒன்றே
 குன்றுடு வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
 மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே
 வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
 ஆறுமுக மானபொருள் நீ அருளல் வேண்டும்
 ஆதிஅரு ணாசலம் அமர்ந்த பெருமானே”     - என்பது திருப்புகழ் பாடலாகும்.

கவியரசு கண்ணதாசன் -
“மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
 வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
 சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கும் முகம் ஒன்று
 சாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
 நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ணமுகம் ஒன்று
 நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு”
- என்னும் திரைப்படப் பாடலில் முருகப்பெருமானின் ஆறுமுகங்களின் சிறப்பைக் குறிப்பிடுகிறார்.



தொடரும்.

Post a Comment

புதியது பழையவை

Sports News