தினத்தந்தி பதிப்பகத்தில் நெல்லை கவிநேசன் எழுதிய புத்தகங்கள்

தினத்தந்தி பதிப்பகத்தில் நெல்லை கவிநேசன் 
எழுதிய புத்தகங்கள்
தூத்துக்குடி எட்டயபுரம் சாலை, புதிய பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெறும், தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில், நெல்லை கவிநேசன் எழுதிய 5 புத்தகங்களும் 10 சதவிகித சலுகை விலையில், தினத்தந்தி பதிப்பக ஸ்டால் எண்: 6-ல் கிடைக்கும். 

1.ஆளுமைத் திறன் - பாதை தெரியுது பார்!
புத்தகத்தைப்பற்றி…
“வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். சிறப்பாக வெற்றிபெற வேண்டும்" - என்ற எண்ணம் எல்லோரிடமும் இயல்பாகவே அமைகிறது. ஆனால், ஒரு சிலரால் மட்டுமே வாழ்க்கையில் சாதனைகள் புரிய முடிகிறது. நினைத்தவற்றை நடைமுறைப்படுத்த இயலாததற்குக் காரணம் என்ன? என்பதை சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அதுதான் “பெர்சனாலிட்டி” என்பதாகும்.

“பெர்சனாலிட்டி” எனப்படும் “ஆளுமைத் தன்மை” கொண்டவர்களால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிகள் பெற்று சிறந்த நிலையை அடைய இயலும். “பெர்சனாலிட்டி” என்பது ஒருவரது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம்? என்பதை உணர்த்தும்வகையில், தமிழின் நம்பர் 1 நாளிதழான தினத்தந்தியில் 185 வாரங்களாக தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகள் இப்போது புத்தக வடிவம் பெறுகின்றன.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் முதல் எழுத்துக்கூட்டி படிக்கும் சாதாரண வாசகர்கள்வரை விரும்பிப் படித்த இந்தத் தொடர்கட்டுரை “ஆளுமைத்திறன்-பாதை தெரியுது பார்!” என்னும் புத்தக வடிவம் பெற்று பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் புத்தகத்தில் - பெர்சனாலிட்டி என்றால் என்ன-? பெர்சனாலிட்டியை வளர்க்கும் பண்புகள், டீன் ஏஜ் பருவப் பிரச்சினைகள் - என பல முக்கியத் தலைப்புகளில் வாழ்க்கை நிகழ்வுகள் அலசப்பட்டுள்ளது. வாழ்வில் புதுமைகளை உருவாக்கவும், சாதனைகளைப் படைக்கவும் விரும்பும் அனைவருக்கும் “ஆளுமைத்திறன் - பாதை தெரியுது பார்!” என்னும் இந்தநூல் பக்கபலமாக அமையும்.

விலை:  ரூபாய்.170/-

2.பழகிப் பார்ப்போம் வாருங்கள்
புத்தகத்தைப்பற்றி…
‘பிறரோடு இணைந்து பழக வேண்டும்’ என்ற எண்ணம் எல்லா மனிதர்களிடமும் உள்ளது. இருந்தபோதும் சிலருக்கு குறிப்பிட்ட சிலரைக் கண்டால் மனதுக்கு பிடிப்பதில்லை. வேறுசிலரிடம் மணிக்கணக்கில் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் என்ன? என்று சிந்தித்துப் பார்த்தால் சில உண்மைகள் நமக்குப் புரியும்.

பிறரோடு குழுவாக இணைந்து பழகுவதற்கு தடையாக சில காரணிகள் அமைந்துவிடுகின்றன. அந்தக் காரணிகளை அடையாளம்கண்டு அவற்றை நீக்குவதற்கு பழகிக்கொண்டால், இனிமையுடன் யாரிடம் வேண்டுமானாலும் எளிதில் பழகலாம். வளர்ந்து வருகின்ற போட்டி நிறைந்த உலகில் எந்தப் பணியில் ஈடுபட்டாலும் பிறரோடு இணைந்து பழகும் தன்மை அடிப்படைக் காரணியாக அமைந்துவிட்டது. பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், தொழில் நிறுவனங்களை தொடங்கி நடத்தும் தொழிலதிபர்களும் மட்டுமல்லாமல் எல்லா நிலையில் உள்ளவர்களும், சமுதாயத்தில் எங்கு சென்றாலும், ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து பணியாற்றுகின்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது. எனவேதான், குழுவோடு இணைந்துப் பழகும் திறன் வளர்ச்சி என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாக மாறிவிட்டது.

“பழகிப் பார்ப்போம் வாருங்கள்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தநூல், குழுவோடு இணைந்து வெற்றிகரமாக பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும், நுணுக்கங்களையும் உள்ளடக்கி, பல உதாரணங்களையும், உண்மை நிகழ்வுகளையும் தாங்கி, சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலர்ந்த முகத்தோடு மற்றவர்களை சந்திப்பதற்கும், வாழ்க்கையில் வெற்றிகளை குவிப்பதற்கும் இந்நூல் பெரிதும் துணையாக அமையும்.

விலை: ரூபாய்.150/-

3.சிகரம் தொடும் சிந்தனைகள்

புத்தகத்தைப்பற்றி…

முறையாக பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்கும் கல்வி, மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. வாழ்க்கையின் அனுபவங்கள், சுய முன்னேற்ற வழிகாட்டல்கள், புத்தகங்கள் மற்றும் பயிற்சிகள் போன்றவை மனித வாழ்வை மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்த வெற்றி வாழ்க்கையாக மாற்றுகின்றன. இத்தகைய சிறந்த நல்வாழ்வுக்கு வழிகாட்டல்களை வழங்கும் வகையில் புகழ்மிக்க நம்பர் 1 நாளிதழ் “தினத்தந்தி” உருவாக்கிய மிகச்சிறந்த நூல்தான் “சிகரம் தொடும் சிந்தனைகள்” ஆகும். இந்த நூலை எழுத்தாளரும், பேராசிரியருமான நெல்லை கவிநேசன் சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்தநூல் - குறிக்கோள், தீர்வுகள், தொண்டு உள்ளம், கோபம், நன்றி, உறவுகள், ஒப்பீடு, சுய விளம்பரம், விமர்சனங்கள், அலுவலக அரசியல், தற்பெருமை, விருந்தினர்கள், எதிர்பார்ப்புகள், இளமை, குடும்பம், செல்போன் - என பல்வேறு நிலைகளில் சிந்தித்து வாழ்க்கையின் வெற்றி ரகசியங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன? அந்தப் பிரச்சினைகளுக்கு காரணங்கள் எவை? பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்ற விளக்கங்களும் எளிய உதாரணங்களுடன் இந்தநூல் முழுவதும் நிறைந்திருக்கிறது. இதனால், மாணவ-மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் பெருமளவில் இந்தநூல் நிச்சயம் பயன்படும்.

விலை: ரூபாய்.160/-

4.COMPETITIVE EXAMINATIONS AND JOB OPPORTUNITIES
புத்தகத்தைப்பற்றி…
எழுத்தாளர் நெல்லை கவிநேசன் அவர்கள் தனது இனிய பேராசிரிய நண்பர்களோடு இணைந்து உருவாக்கிய ஆங்கில நூல் “Competitive Examinations and Job Opportunities” ஆகும். 

இந்த நூலை உருவாக்க திருநெல்வேலி பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.பாலகுமார், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை பேராசிரியர் டாக்டர் என்.ராஜலிங்கம், கன்னியாகுமரி மாவட்டம் தேரைகால்புதூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு விரிவாக்க மைய கணிதத்துறை பேராசிரியர் டாக்டர் சி.சேகர் ஆகியோர் இந்த நூல் சிறப்பாக உருவாக தங்கள் பங்களிப்பை அளித்துள்ளது நூலுக்கு வலுசேர்க்கிறது. 

இந்த நூலில் எளிய ஆங்கிலத்தில் Union Public Service Examination [UPSC], Tamilnadu Public Service Examination[TNPSC], Teacher Recruitment Board (TRB) Examination, Banking Services Examination, Staff Selection Commission Examination, Railway Recruitment Board Examination ஆகிய போட்டித்தேர்வுகள் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மேற்படிப்புக்காக நடத்தப்படும் JEE, GATE, AIIMS, NEET, CAT, XAT, CLAT, IISER, GMAT, SAT, GRE, TOEFL, IELTS போன்ற நுழைத்தேர்வுகள் பற்றிய விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. 

இவைதவிர, போட்டித்தேர்வுகளை வெற்றிகரமாக எழுதுவதற்கான வழிமுறைகளும், மாதிரி புத்திக்கூர்மைத் தேர்வுக்கான கேள்விகள்-பதில்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. 

விலை: ருபாய்.75/-

5.நீங்களும் தலைவர் ஆகலாம்
புத்தகத்தைப்பற்றி......
ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு சில அடிப்படைப் பண்புகள் அவசியமாகிறது. குறிப்பாக, திட்டமிடுதல், தகவல்தொடர்பை சரியான முறையில் கையாளுதல், சிறந்த நேர நிர்வாகம், குழுவாக இணைந்து பணியாற்றும் திறன் போன்ற முக்கிய குணங்களெல்லாம் செயல் வெற்றிக்கு அடிப்படையாகிறது. இந்தக் குணங்களை ஒருவர் பெற்றிருந்தால் தானாகவே தலைவராகி விடுகிறார். தலைமைப்பதவி என்பது ஒரு சிலருக்கே கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக அந்த எண்ணத்தை மாற்றி, ‘நானும் ஒரு தலைவர் ஆவேன்’ என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டும். அந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு “நீங்களும் தலைவர் ஆகலாம்” என்னும் இந்த நூல் உறுதுணையாக அமையும்.

பள்ளி - கல்லூரிகளில் படிக்கும்போதே தலைமைப் பண்புகளை வளர்ப்பதில் மாணவ, மாணவிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இளமைப்பருவத்தில் மிக அதிக கவனத்துடன் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொண்டால் எல்லோரும் எளிதில் தலைவராகிவிடலாம். ஒருவர் தலைவராக மாறுவதற்கு எவ்வாறு தயாராக வேண்டும்? என்பதை இந்தநூல் தெளிவாக விளக்குகிறது. இதன்மூலம் ஒருவரது பெர்சனாலிட்டியை எளிதில் வளர்த்துக்கொள்ள இயலும்.

விலை: ரூபாய்.80/-

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News