திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் - கந்த சஷ்டி திருவிழா 2019

திருச்செந்தூர், 
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் - 
கந்த சஷ்டி திருவிழா 2019

நெல்லை கவிநேசன் எழுதிய “திருச்செந்தூர் முருகன்” என்னும் நூலைப் பெற...


முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது “கந்த சஷ்டி திருவிழா” ஆகும். கோவிலில் இந்தஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 28ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 

அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருகிறார். காலை 6.30 மணிக்கு யாக சாலை பூஜை தொடங்குகிறது. பின்னர், யாகசாலையில் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, மதியம் 12 மணியளவில் தீபாராதனை நடைபெறுகிறது. 

சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளல்

தொடர்ந்து மதியம் 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது. 

பின்னர், மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

சுவாமி ஜெயந்திநாதர் வீதி உலா

2ஆம் நாளான வருகிற 29ஆம் தேதிமுதல் 5ஆம் நாளான 1ஆம் தேதி வரையிலும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரி வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 

சூரசம்ஹாரம்

6ஆம் நாளான வருகிற 2ஆம் தேதி (சனிக்கிழமை) மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. 

மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர், சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல்கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

திருக்கல்யாணம்

7ஆம் நாளான 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. 8ஆம் நாளான 4ஆம் தேதி (திங்கட்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் நடைபெறும்.

9ஆம் நாளான 5ஆம் தேதி (செவ்வாய்கிழமை) முதல் 11ஆம் நாளான 7ஆம் தேதி (வியாழக்கிழமை) வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 

12ம் நாளான 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டுவிழா நடக்கிறது. பின்னர், சுவாமி-அம்பாள் வீதி உலாவந்து கோவில் சேர்கிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் திரு.இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் திரு.அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

நன்றி: தினத்தந்தி.

Post a Comment

புதியது பழையவை

Sports News