தமிழ் வளர்த்த தலைவர்கள்-1-ஆறுமுகநாவலர்.



தமிழ் வளர்த்த தலைவர்கள்-1



( இது ஒரு புதிய தொடர். இந்த தொடரை ,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலகத் துறை தலைவர் டாக்டர் .பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதுகிறார்கள் .
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த தொடர் வெளிவருகிறது.
 தமிழுக்கு தொண்டாற்றி ,மிகச்சிறந்த இலக்கியங்களைப் படைத்து, நல்ல எண்ணங்களை விதைத்து, மறைந்த புகழ் மிக்க தலைவர்களை இந்த தொடர் படம் பிடித்துக்காட்டுகிறது.)


தமிழையும், சைவத்தையும் மீட்டெடுத்த ஆறுமுகநாவலர். 
- முனைவர்.ப.பாலசுப்ரமணியன்,
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், 
திருநெல்வேலி.
  
 இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய நேரம் . அந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தில் 1822 ஆம் ஆண்டு பிறந்தார். 
 சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது, வரலாற்றுக்கு முற்பட்ட சமயத்தை காப்பாற்றியதில் ஈழம் வாழ் மக்களின் உள்ளத்துள் ஒளி விளக்காய் இருந்தவர்.  . இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு  கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். 
 அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் தங்கள் சொந்த கலாசார வழிகளை மறந்து வாழ்ந்தனர். 
 அந்த சூழலில் ஆறுமுக நாவலர் கல்வியழகும், தெய்வ நெறியும், பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத்துடித்தார். அதற்காக கடுமையாக அவர் உழைத்தார். அவரது வாழ்வின் இலட்சியமே அதுவாக இருந்தது. வசதியான உத்தியோகத்தைப் பெறும் வாய்ப்பிலிருந்தும் அவர் அதனை ஏற்கவில்லை. இல்வாழ்வில் புகவில்லை. இவையனைத்துக்கும் காரணம் சைவ சமயத்தையும் அதை சிறப்படைய வைக்கும் கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்ற பேரார்வம் அவரிடம் இருந்தது.  
 நெற்றியிலே நீறுபூசவும், வாழையிலையிலே அமுதுண்ணவும் கூட நம்மவர்கள் அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த அவலங்கள் மாறவும், அன்று அந்நியரின் இன்னல் தாங்காது நாட்டை விட்டே வெளியேறிய ஞானப்பிரகாசர் போன்றோரின் பிரார்த்தனைகள் பலிக்கவும் நாவலர் பனி செய்தார், அவரால் தமிழ் கலாசாரம் பிழைத்துக் கொண்டது. சிவநெறி தழைத்தது.
  சைவ சமய நால்வர்கள் சென்ற தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். அது போல நாவலர் தாம் போன இடங்களிலெல்லாம் உலக நலன் வேண்டி சைவ நெறி கருத்துக்களை பரப்பி வந்தார். சமயப் பிரசங்கங்களுடன் தேவார திருமுறைகளையும் ஒலிக்க செய்தவர் நாவலர். அந்த பயணத்திலே அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இவருக்கு எதிராக அந்நியர்கள் இழைத்த துன்பங்களை கண்டு அஞ்ச வில்லை, அயராது பணிகளை மேற்கொண்டார்.
 தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும், சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் 20-வது வயதில் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். அதன் நிறுவனர் பேர்சிவல் பாதிரியாருக்கு பைபிளைத் தமிழாக்கம் செய்வதில் உறுதுணையாக இருந்தார்.
 வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இதனால் பலரும் சிவதீட்சை பெற்றனர். அசைவ உணவைத் தவிர்த்தனர். இவரது முயற்சியால் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறத் தொடங்கின.
சமயக்குரவர்களின் பாடல்களை சுவடியில் இருந்து தொகுத்துப் புத்தகமாக அச்சிட்டார். தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். சைவப் பிரகாச வித்யாசாலை என்ற பாடசாலையைத் தொடங்கினார்.
 சைவத் தமிழ்ப் பணிகளை இடையூறின்றி செய்வதற்காக தமக்குக் கிடைத்த உத்தியோகத்தையும் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான். ஆம், சைவ சமய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக, ஆசிரியர் பணியை 1848-ல் துறந்தார். 
 சைவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. தமிழ் நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்கு சைவசமய நூல்களைப் பிரசுரித்தார். 



 இதற்காக சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவினார். அச்சு இயந்திரம் வாங்க 1849-ல் சென்னை வந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்து நாவலர் பட்டம் பெற்றார். சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார்.
த ன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம்,  ஆத்திச்சூடி,  கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவசமயசாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர்.
சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.
 ஏடுகளில் எழுதப்பட்டிருந்த பல பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்தவரும், அத்துறையில் ஏனையோருக்கு வழி காட்டியாக விளங்கியவரும் நாவலர் பெருமானே ஆவார்.
 20-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஏழைகளுக்கு இலவச நூல்களோடு இலவசக் கல்வியும் வழங்கி தாய்மொழியில் கல்வி கற்கச் செய்தவர் ஆறுமுக நாவலர் . 
தமது வாழ்நாள் முழுவதும் பிரம்சாரியாகவே வாழ்ந்தவர். சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்தல், புராணப் படலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர் அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசு நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தை தடுக்க பாடுபட்டார். 
 திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார். இதன் காரணமாக ஆலயங்கள் மீண்டும் அமையப் பெற்றன. இறைவனின் இயல்புகளும், இறை நெறியின் அறப்பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. எமது கலைத்திட்டத்திலே சமயக் கல்விக்கு இன்று முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து எங்கள் நாவலர் பெருமான் நடைமுறைப்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாடு பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே செய்தார். 
 ஒரு புறம் அடியவர் போன்று வேஷமிட்டு ஏமாற்றுபவர்களை கண்டார் சமயத்தை குறை சொல்ல வில்லை, அந்த சமயத்தின் பேரில் உள்ள போலிகளை அடையாளம் காண சைவ சமய நெறியில் உண்மை பிடிப்புள்ளவர்கள் பெருக வேண்டும் என நினைத்தார்,  அதை சாதித்து காட்டினார். 
 நாவலர் “நிலையில்லாத என் சரீரம் உள்ளபோதே என்கருத்து நிறைவேறுமோ நிறைவேறாதோ எனும் கவலை என்னை இரவு பகலாக வருத்துகின்றது என்று கூறிய நாவலர் பெருமானின் கருத்தின்படி தமிழ்க் கல்வியும், சைவ சமயமும், மறுமலர்ச்சியடைவதற்கு முக்கிய ஸ்தலங்கள் தோறும் வித்தியா சாலை ஆரம்பிக்கவும்  சைவப் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டார்.  
 அதன் பொருட்டு  கற்றுகொடுக்க வல்ல ஆசிரியர்களை உருவாக்கினார். அவர்கள் நாவலரின் பணிகளிலே ஆர்வமுடன் செயல் பட்டனர். 
 1894ம் ஆண்டிலே இலங்கையில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலிலே திருவிழா நடந்தது. அங்கு தேவாரத் திருக் கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலியவை திருவிழா காலத்திலே படுவதையும் நடைமுறை படுத்த நினைத்தார். 
 அதற்காக தமிழ்நாட்டின் திருவாவடுதுறையிலிருந்து  ஓதுவார்களை அழைத்து திருவிழா காலத்திலே அவர்களையும்  அங்குள்ள மற்றைய சைவர்களையும் சேர்த்து தெய்வ திருவீதி உலாவில் சாமிக்கு பின்னால் தேவார இசை பாட பக்திநெறியுடன் திருவிழாவை சிறக்க வைத்தார். சுவாமி வீதியிலே உற்சவங் கொண்டருளும் போது சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஓதுவித்துக் கொண்டு வந்தார். இவர்கள் தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஓத அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஓதுவாராயினார்கள். அதை நடைமுறை படுத்தினார். 
 நாவலரும் விபூதி பூசி உருத்திராக்கம் தரித்து தலையிலேய சிரமாலையும் கழுத்திலே கண்டிகையும் தரித்து யாவர்க்கும் பக்தியை விளைவிக்கத்தக்க சிவ பொலிவோடு திருக்கூட்டத் தலைவராய் விளங்கினார். 




 சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக அவரால் முடிந்த அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையையும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்

 தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார். அரும் தொண்டாற்றிய நாவலர் பெருமானால் தமிழும், சைவமும் இலங்கையில் தழைத்தது, இன்றும் நம் தமிழகத்தில் அவருடைய நூல்களும், சைவ அனுட்டான விதிகளும் பலருக்கு வழிகாட்டியாக உள்ளது.  தமிழ் சமூகம் என்றும் அவருக்கு நன்றியுடன் கடமை பட்டுள்ளது.

                                                       ___________________________-

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News