கல்லூரி நாள் விழா

 டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 

பொறியியல் கல்லூரி நாள் விழா




 தினத்தந்தி மே 28

 திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நாள் விழா நடந்தது.

கல்லூரி நாள் விழா 

 திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நாள் விழா, கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை அஸ்பயர் சிஸ்டம்ஸ் நிறுவன மேலாளர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

 அப்போது அவர் கூறியதாவது:-

 வெற்றி நிச்சயம்

 மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி பெற 5 வழிகளை பின்பற்ற வேண்டும். முதலில் எந்த ஒரு செயலையும் நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

 பிறர் நம் மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு உழைக்க வேண்டும். நமது திறன்களை வளர்த்து கொள்வதுடன் எதையும் ஆழ்ந்து விரிவாக கற்க வேண்டும். நாம் கற்ற பாடங்களை செய்முறைப்படுத்தும் வகையில் பயிற்சி பெற வேண்டும்.

 இவ்வாறு தன்னம்பிக்கை, நம்பிக்கை, திறன் வளர்ப்பு, பயிற்சி போன்றவற்றை ஒருங்கிணைத்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். 

தோல்வியை கண்டு அஞ்ச கூடாது

 மாணவர்கள் தோல்விகளைக் கண்டு அஞ்ச கூடாது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வெற்றிக்கான வழிகளை கண்டறிய வேண்டும். சவால்களை நமக்கான நல்வாய்ப்பாக பயன்படுத்தி வெற்றி காண வேண்டும். அனைவரையும் மதிப்புடன் பேசுவதுடன் எந்த இடத்தில் எதை பேச வேண்டும் என்று அறிந்து தெளிவாக கூற வேண்டும்.

 நமக்கு தெரிந்த மொழியில் மற்றவர்களுக்கு புரியும் வகையில் பேச வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வேலையில் முழு மனதுடன் செயல்பட்டு திறன்களை வளர்த்து கொள்ளும் வகையில் பணியாற்ற வேண்டும். நேர்மையாகவும், பொறுப்புடனும் பணிபுரிய வேண்டும். 

நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். மன திருப்தியுடனும், நட்புறவுடனும் பணியாற்றி வெற்றி காண வேண்டும். 

     இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து அவர், கல்லூரி ஆண்டு மலரை வெளியிட, அதனை ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் பெற்று கொண்டார். 

பரிசளிப்பு 

பின்னர் அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்க பரிசுகளை அஸ்பயர் சிஸ்டம்ஸ் நிறுவன மேலாளர் செந்தில்குமார் வழங்கினார். 

 கல்லூரி அளவில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்ட கணினி பொறியியல் துறை இறுதி ஆண்டு மாணவர் சுடலைமுத்து செல்வகுமார் மற்றும் ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. 

 கல்லூரியில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கும் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது.

 பின்னர் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. 

கலந்து கொண்டவர்கள் 

விழாவில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சிவில் என்ஜினியரிங் துறை தலைவர் தமிழரசன் நன்றி கூறினார்.

நன்றி: தினத்தந்தி(29.05.2022)


Post a Comment

புதியது பழையவை

Sports News