ஆனந்தம் தரும் ஆத்திசூடி!-2

ஆனந்தம் தரும் ஆத்திசூடி!-2
புலவர் டாக்டர். வை.சங்கர லிங்கம்

மீளுமாறு உணர்ந்துகொள்(எண் 78)






நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் நாம் நண்பர்களாக ஏற்பதில்லை. சிலரை ஏற்கிறோம். சிலரை மட்டுமே உயிர் நண்பர்களாக மதிக்கிறோம்.

அவர்களிடமே நமது ரகசியங்களை பகிர்கிறோம். நமக்கான ஆறுதலையும் நம்பிக்கையையும் தேடுகிறோம். 

சங்ககாலம் முதல் இந்த நவீன ஊடக காலம் வரை, நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள்.

நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் "பெரிய பாக்கியம் "ஆகும். 

ஐந்து வயதில் அறிமுகம் ஆகும் சில நண்பர்கள் ,ஆயுள் முழுக்க தொடர்ந்து வருவது நமக்கு கவுரவம் கூட. 

இன்றளவும் பலரின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வருவதும், ஏமாற்றங்களை துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள் மட்டுமே..

ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர்.கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார்.

கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர்.

மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார்.அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால்,kkk கடையை அடைக்க மாட்டார்.

அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார்.

ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், “ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன்,” என்று கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன்.


பணப்பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த அவனின் நண்பன் ஒருவன் அங்கே வந்தான்.

”அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம்,” என்று யோசனை கூறினான்.

திருடனுக்கோ," திருடுவதா? வேண்டாமா? "என்ற தயக்கம். தனக்குள் ஏன் இந்த மாற்றம் ?என்றே அவனுக்குப் புரியவில்லை.

சிறிது நேரம் சிந்தித்தவன், தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை.” என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.

சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம், எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா?  என்று பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான்.
கடைக்காரரோ,"ஏன் இப்படி கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் கடையை ஒப்படைத்து சென்றேன். அதனால்பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவை இல்லை,” என்றார்.

கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது.“ உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகி விட்டதே..வாழ்நாளெல்லாம் உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பு கிடைத்தால் ,அதைவிட எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை "என்றான்.

கடைக்காரர்,, ''நீ சொல்வது புரிய வில்லையே!”, என்றார்.

”ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன்.என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம்.. ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது.இனி ஒருநாளும் திருட மாட்டேன்,” என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான்.

ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும், நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும்.

ஒருவன் தான்செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ் பெற்றிருக்க முடியும். 

அதுபோல ஒரு காலத்தில் ஒருவன் தவறு செய்தவனாக இருந்தாலும், வாய்ப்புகள் அமையும் பொழுது அந்த தவறுகளில் இருந்து மீண்டு நல் வாழ்க்கைக்கு திரும்புவதே நல்லது.

 இதைத்தான் பாரதியார், தனது புதிய ஆத்திசூடியில் ,"மீளுமாறு உணர்ந்து கொள்" (எண்78) என்கிறார்.

அடுத்த புதன்கிழமை (6.5.2020)சந்திப்போம் 

4 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News