ஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-18


ப்ளைட்ல, சுஜாதா சார் கூட 

நீயும் வர்ர்ர்ர்ற…!

( ஜீனோம் புத்தகத்தில் அவரது முன்னுரை வெறும் ஏழு வரிகளே!) 
நான் என் புதுமனை புகுவிழா அழைப்பிதழை அவரிடம் கொடுக்கச் சென்றேன்…..சாயங்காலம் மணி 4 இருக்கும். தரைத்தளத்தில் வாக்கிங் செய்யும் நேரம். ஆனால் அன்று இப்போதான் தூங்கச்சென்றார் என்பதறிந்து… சுஜாதா சார்ட்ட இந்த இன்விடேஷனைச் சேர்த்திருங்க என அடிக்கடி சந்தித்து.. (இடுப்பில் பேண்ட் நிற்கச் சிரமப்படும்) பழக்கப்பட்ட செக்கியூரிட்டி சார் வசம் அழைப்பிதழை அழுத்திவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் சார் போன்ல…  நாணா… இன்விட்டேஷன் பிரம்மாதம்ம்பா…உன் பூர்வீகம் காரைக்குடின்னு கதவு டிசைன் சொல்லுதேன்னார்! 



பதிலுக்கு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்…ஸாரி..அழைப்பிதழை நேரில் தரமுடியாமைக்கு நான் மன்னிப்புக் கேட்டது…அவர் காதுக்கோ அது தாண்டி மனசுக்கோ கேட்ட மாதிரியே தெர்ல….அவ்ளோ கேஷுவல்ல்ல்… (மச்சானோட ஒன்னுவிட்ட தம்பிக்கு கூரியர்ல அனுப்புனாலே குத்தம் சொல்லும் ’சமூகத் தொற்று’ நிறைந்த உலகில் அவர் பண்பு…. மேன்மக்கள் மேன்மக்களே!!)
அப்போதைய உதவியாளர் திருமதி. லீனா அவர்களின் புதுமனை புகுவிழாவுக்கு (லாயிட்ஸ் சாலைன்னு நெனைக்கேன்) சுஜாதா வந்த போது…அந்தத் தெருவே அல்லோலஹல்லோலப்பட்டது. 


ஆனால் மைலாப்பூரிலிருந்து எனது பொழிச்சலூர் இல்லம் (அப் அன் டவுன் 18 +18  36 கிலோ மீட்டர்ஸ் )…அவர் வருவாரா என்பதில் சான்ஸே இல்லைன்னு மைக்ரோ அளவுகூட எதிர்பார்ப்பில்லை. (இருந்தாலும் டெலிபதி  மனசில் அமானுஷ்யமாய் ஒரு குரல்…..வருவார் பாறேன்னு) அதே போல வந்தார்… வென்றார்..! 



அவர் வந்தது போனது எல்லாத்தையும் என்னை என் இராங்கியத்திலிருந்து கைதூக்கி விட்ட… என் முதன்மை நலம் விரும்பி…திரு.ஆர்.ஆர்.கண்ணன் அவர்களிடம் பெருமை பொங்கச் சொல்லி மகிழ்ந்த வேளையில் … மாப்ள சுஜாதா சாருக்கு  நீ அவ்ளோ நெருக்கமா.…நம்ம திருச்சி லயன்ஸ் கிளப் ஸ்ரீரங்கம் பங்ஷனுக்கும் சுஜாதா சார் வருவாரான்னு  கேளு..வர்றேன்னாருன்னா  கூட்டிட்டு அவர் கூட பிளைட்டுல நீயும் வர்ர்ரற..அவருக்கு என்னிக்கு தேதி சரியா வருமோ அந்தத் தேதில ஃபங்ஷன் வெச்சுக்கலாம் …என்றார் ஆர்.ஆர்.கே.. … ( டேய் மாப்ள …ப்ளைட்ல, அவர் கூட நீயும் வர்ர்ர்ர்றன்னு சொன்னத நினைச்சு  மனசு றெக்கை கட்டிப் பறந்தது ). 



(அடி..ஆத்தீ… இதெல்லாம் நடக்கிற காரியமே இல்லை …இருந்தாலும் ட்ரைப் பண்ணுவோம் என 1% மனநிலை)…. சுஜாதா சார்ட்ட நேரம் பாத்து…. சீரங்கம் பேரைச் சொல்லி போலாம் சார்ன்னு சொல்லிப்பார்த்தேன்… பிளைட்..கார்.. ட்ரெயின் எதுன்னாலும் அவங்க ரெடி… போய் வரலாம் சார்ன்னேன்..
 ”ஸ்ரீரங்கம் ட்ரிப்.. …எனக்கும் போலாம்னு ஆசைதான்..ஆனா இப்போ உள்ள ஹெல்த் கண்டிஷன்ல நோ வே” ன்னு… (எத்தனையோ முறை தொடரும்னு போட்டு எழுதியவர்…என் ஐடியாவுக்கு எடுத்தவொடனேயே ’முற்றும்’ போட்டார்…மேற்கொண்டு அதைப் பற்றி பேசல.. அந்தக் கற்பனையையும் மாஸ்க் போட்டு மூடிட்டேன். அட்டைவடிவமைப்புக்காக அப்ப்ப்போ அழைப்பார்..சுமார் 60 புத்தகங்களுக்கு என் அட்டை என்பது என்றும் பெருமை.


வழக்கம் போல்  ஒரு நாள் அழைத்தார்…அவர் வீட்டுக்குச் சென்றேன்...உயரத்தில் வளராமல் அகலவாக்கில் வளர்ந்துகொண்டிருக்கும் அவரது நாய்…. என் பழகிய முகம் கண்டு சிக்கனமாய் வாலை அசைத்துப்போனது…  அப்போது ஜீனோம்  என்னும் தொடர் விகடனில் அப்பவே அதிநவீன வைரஸ்  சமாச்சாரங்கள்…  டிஎன் ஏ. ஸ்பைரல் நூலேணி எனக் கண்ணுக்க்க்கே தெரியாத இன்றைய ’கொரோனா’ மாதிரியான வஸ்துகள்  பற்றி யாரோ ஒரு டாக்டருடன்  போன்ல இருந்த அவர்…. சைகையிலே வெயிட் பண்ணச்சொன்னார்…அந்த சில நிமிட இடைவெளியில் ஸோபா ஓரம் நிறைய குவித்துக் கிடக்கும் புத்தகங்களை அடுக்கினேன்.. அதில் ஜெனட்டிக் சம்பந்தப்ப்ட்ட ஆங்கில இதழ்…வெறுமனே பொம்மை பாத்து பெருமூச்ச்ச்சிட்டு மூடிவெச்சுட்டேன்! 
அடுத்த நிமிடம்…அந்த திருச்சி போய் வர்ர்ற லயன்ஸ் கிளப் மேட்டர்…சொன்னியே..  இன்னும் அந்த ஆப்ஷன் ஓப்பன்லதான் இருக்கான்னாரு… ( லாயர் கணேஷ் வந்து யங் லேடீஸ் மேட்டர்ல டவுட் கேட்ட வசந்த் மாதிரி உள்ளுக்குள்ள ‘சுஸ்த்’ ஆனேன்.) மலைக்கோட்டை ’ட்ரோன் வியூல’ வந்து போனது… சார்…பிளைட்லேயே போலாம் சார் …இதோ இப்பவே  கேட்டு சொல்றேன் சார்ன்னு (ரிலையன்ஸ் மொபைல் போஸ்ட் பெய்டு)… மறுமுனையில் திருச்சி ஆர் ஆர் கே அவர்களின் குரல் எல்லையில்லா மகிழ்வுடன் …கொடியசைக்க பயணம் உறுதியானது!



 ‘பிளைட் வேணாம்ப்பா…..ராக்போர்ட் போதும்’ன்னார்… தகவல் பரிமாறி..மாறி..மாறி சுஜாதா சார், சுஜாதா மேடம் & நாணா என்கிற நாராயணன் என்னும் என் நாமத்துடன் 3 பேர் ..ராக்ஃபோர்ட்..பர்ஸ்ட் கிளாஸ் ஏஸி..டிக்கட் கன்ஃபார்ம்… ( கடைசி நேரத்தில் திருமதி சுஜாதா அவர்களால் வர இயலவில்லை) நானும் அவரும் மட்டுமே…கிளம்பும் நாளில் ஒவ்வொரு மணி நேரமும் திருச்சி நிகழ்ச்சி ஏற்பாட்டளரிடமிருந்து போன்..ம்ம்…வீட்டை விட்டு கெளம்பியாச்சு ஓவர்..எக்மோர் வந்தாச்சு ஓவர்…ட்ரைன் ஏறியாச்சு ஓவர்ன்ன்னு …அவருக்குத் தெரியாமல் நான் தகவல் கொடுத்துக்கொண்டுவருவதாக நெனச்சுட்டு வந்த என்னிடம் ‘என்ன ரன்ன்னிங் கமெண்ட்ரியான்னார்….சிரித்து மழுப்பினேன்.. ராக்ஃபோர்ட் முதல் வகுப்பில் நானும் அவரும் மட்டும்...என் கையில் இருந்த ரிலையன்ஸில் ஒரு போன் போட்டு சுஜாதா மேடத்துக்கு வண்டி கெளம்பிய விபரம் சொன்னேன். …..அவரது படுக்கை விரிப்புகளைச் சரிசெய்தேன்....மிக சுதந்திரமா ஃபீல் …விசில் அடிக்காத குறை அவ்ளோ ரிலாக்ஸ்ஸா தெரிஞ்சார்…..  …..அவருக்கு அவருடைய தூக்கத்துக்கு எந்த வகையிலும் நான் எடஞ்சலாக இருக்க்க்கூடாது என ரொம்ப அடக்கி வாசித்தேன்…..ஆனால் அவர் விடலை…உன் கதைய சொல்லு எப்டி சென்னைக்கு வந்தேன்னார்…




திருச்சி சாரதாஸ் வால் பெயிண்டிங் ஆர்ட்டிஸ்ட் எப்படி இந்தியா டுடே ஆர்ட் டைரக்ட்டர் ஆனேன் என்பதை செங்கல்பட்டு ஸ்டேஷன் வருமுன் முடித்துக்கொண்டேன். அவர் பேசி நான் கேட்பது போய்..நெலம உல்டாவானது. நான் கிட்டார் கற்றுக்கொண்ட்துக்கு உங்கள் நைலான் கயிறு ஜி ஸ்டிரிங்கும்…கரையெல்லாம் செண்கப்பூ கல்யாணராமனும்  ஒரு காரணம் என்று சொன்னேன்.. அப்போதான் அவரும் டெல்லியில் கிட்டார் கற்றுகொண்ட கதையும்…கூடவே இளையராஜாவின் ப்ரியா படத்தில் டார்லிங் டார்லிங் ஒரு காது மாறி ஒன்னொரு காதில் ஒலிக்கும் ஸ்டீரியோ ஒலிப்பதிவில் ப்ரியா முதல் தமிழ்ப்படமாக இசைஞானி எடுத்துக்கொண்ட சிறப்பு கவனம்  பற்றிச்சொன்னார்…



.ஸ்ரீரங்கம்..விசிட் அவர் சகோதரர் (டெல்லி வாழ்) இல்லம்… சாருபாலா தொண்டைமான் இல்லம்… லயன்ஸ் கிளப் மீட்…ஏற்பாடு திரும்ப  காலை 9-30 வைகை …ஏஸி சேர் காரில் அதிர் சிரிப்புகளுடன் பேசிக்கொண்டே இரட்டை சீட்டில் நானும் அவரும்… என்னைச் சுற்றியும் பாரன்ஹீட்அளவில் சில பொறாமைக் கண்கள்  … ‘மறுபடி எப்போ ஸ்ரீரங்கமோன்னு நெனச்சேன்…..நல்லவேளை நீ வந்ததால் எல்லாம் சாத்தியப்பட்டது’ என்றார்… எனக்கு மட்டும் வைகை எக்ஸ்ப்ரஸ் சீல் பெல்ட் போட்ட பிளைட்டா பறந்தது. 
அந்த இரண்டுநாள் திருச்சிப் பயணம் மறுவாரம் விகடனில் கற்றதும் பெற்றதும் தொடரில் ஆர்.ஆர்.கே, சாருபாலா தொண்டைமான் புகைப்படங்களுடன் நிறைவான நிகழ்வாய் அவர் நடையில் ரீப்பிளேயாக ஓடியது ..திருச்சி நட்புகளுக்கு எல்லையில்லா ஆன்ந்தம்!



அப்படியாக ஒரு டிசம்பர் மாதத்தில் நானும் அவரும் திருச்சி சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இரண்டு நாட்களில் அவரும் நானும் நிறைய விஷயங்கள் பேசித் தீர்த்தோம். சென்னை இறங்கியதும்…
நாணா….”இந்த ஜீனோம் தொடரை  திருமகள் /திருப்பதி பொஸ்தகமா போடறார்ப்பா.... அட்டைப்படம் வழக்கம்போல கலந்துகட்டி எதாவது பண்ணிடு…. 80பக்கம் சின்ன புஸ்தகம்”  புதுசா ஃபாண்ட் எதுவும் கிரியேட் பண்ணிட்ட்ருக்காதே… .இனிய இயந்திரா’ மாதிரி … ரெம்ம்ப மெனக்கெட வேண்டாம்ன்னாரு…. அவரது அட்டைப் படங்களில் மிக கவனமாக இருப்பார்…

உதாரணத்துக்கு கருப்புக் குதிரைகள் மறுபதிப்புக்கு  அட்டை வடிவமைத்துக் காட்டினேன். அப்பவே மேட்ச் ஃபிக்ஸிங் பற்றிய கதை. ரூபாய் நோட்டுகளை அடுக்கி அதன் மேல் ஒரு கிரிக்கெட்டர் பந்து வெந்து நொந்து எரிந்து உருகுவது போலும் அமைத்தேன்…பாத்துட்டு வழக்கம்போல பாத்துட்டு பிரஸ்ஸுக்கு அனுப்புன்னு சொல்லாமல் கதை படிச்சியான்னார்… ஷாக்கானேன் ..இரண்டு மூன்று முறைக்கு மேல படிச்சுட்ட்டுத்தான் வடிவமைச்சேன். கதையில வர்ர்ர்ர்றது டெஸ்ட் மேட்ச் இல்ல.. ஒன்டே மேட்ச்…சிவப்புப் பந்தை வெள்ளையா மாத்திடுன்னார்…ரொம்ப ஷேம் ஆயிட்டேன்…அப்புறம் கருப்பு என்பதில் எறும்புக்கு வர்ர ’று’ மாத்திடுன்னார்… அவ்வளவு நுணுக்கமான அவதானிப்பு என்றும் அவரிடம் உண்டு…





  நாளைக்கு காலையில மெயில்ல்ல அனுப்புவதாக வழக்கம்போல் பொய் உறுதிமொழி கொடுத்தேன்…ஏன்னா அவரோட தொடரை முழுசா ஈஸ்வரி லெண்டிங்ல இல்லை ன்னா திருமகள் கம்போஸிங் ஃபர்ஸ்ட் ப்ரூப் வாங்கிப் படிக்கணும்…. அவரது கதை படிக்காமல்… அவர் சொல்ல வரும்  கண்டெண்ட்டுக்கு சம்பந்தமில்லாத வகை இமேஜஸ் போட்டு சில அட்டைப் படங்களைப் பார்த்து எனக்குள் உள்ளூர பெரும் ’மெய்’வருத்தம்! 



அதே வாரத்தில் ஜீனோம் அட்டை வடிவமைப்பு டபுள் ஓக்கேயானது…அந்தப் புத்தகத்தின் 7 வரி முன்னுரையில் ஒன்னறை வரியில் என் பெயரை சேர்த்து எழுதியதை இன்று படித்தாலும் ஆனந்தமே….

தொடர்வேன்,.

2 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News