ஆனந்தம் தரும் ஆத்திசூடி-15 --புலவர் சங்கரலிங்கம்.

 ஆனந்தம் தரும் ஆத்திசூடி-15

 புலவர் சங்கரலிங்கம்.


'ஞெகிழ்வது அருளின்'


பல நேரங்களில் நல்லதாக, ஆதரவாக சொல்லப்படும் நான்கு வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை,பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவது இல்லை.

அதுவும் துன்ப காலங்களில் ஒருவன் சிக்கித் தவிக்கும் போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கை ஊட்டும்படி யாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவே இல்லை.

தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கும் நீந்தத் தெரியாத மனிதனுக்குக் கிடைக்கும் கட்டையை பிடித்து மிதக்க உதவுவதைப்போலஅந்த அன்பான நல்ல வார்த்தைகள் துன்ப காலத்தில்  தாக்குப் பிடிக்க ஒருவனுக்கு உதவுகின்றன.

மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள், தைரியசாலிகள் கூட சில சமயங்களில் தங்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்து விடுவதை நாம் பார்த்துஇருக்கின்றோம்.

இன்றைய நாட்களில் ஆதரவான நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையில் அரிதாக இருக்கிறது.

எத்தனையோ வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி இருந்தாலும் மனப்பற்றாக் குறையாலும், நேரப்பற்றாக் குறையாலும் நல்ல நம்பிக்கை, ஆறுதல் ஊட்டும் வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது.

இந்தச் சிறிய குறைபாட்டின் விளைவுகள் வார்த்தைகளில் அடங்காதவை. பூதாகாரமானவை.



"கல்கத்தா வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த தொழு நோயாளி ஒருவரது உடல் நிலை மிகவும் மோசமாகி விட, அவர் அன்னை தெரசாவின் கருணை இல்லம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார்.

சில இடங்களில் அழுகியநிலையில் இருந்த அவர் உடலைச் சுத்தம் செய்து கொண்டு இருந்த சேவகர் ஒருவர்,ஒரு கட்டத்தில் அந்த நெடியைத் தாங்க முடியாமல் பின் வாங்க, அன்னை தெரசா அந்த வேலையைத் தானே                   மேற்கொண்டு தொடர்ந்தார்.

சிறிதும் முகம் சுளிக்காமல், கெட்ட நெடியைப் பொருட் படுத்தாமல் அன்னை தொடர்ந்து செய்த அந்தப் பணி அந்தத் தொழு நோயாளியின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது.

"அம்மா இது போன்ற அருவருக்க வைக்கும் வேலையை  செய்ய உங்களுக்கு சிரமமாகத் தோன்ற வில்லையா?" என்று அவர் கேட்டார்.

"சகோதரரே!

" நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனையை ஒப்பிடும் போது நான் செய்வது ஒரு சொல்லத்தக்க செயலே இல்லை" என்று அன்புடன் பதிலளித்தார் அன்னை தெரசா.

அன்னையுடைய அந்தத் தன்னலம் இல்லாத சேவைக்கு இணையாக அந்தத் தொழு நோயாளியின் இதயத்தைத் தொட்டது அந்த அன்பான வார்த்தைகள்..

சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை. அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள். 

சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள்.

அப்படி நல்லதைப் பாராட்டும்போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள்.

மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கி இருக்கையில் ஆத்மார்த்தமாய் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள்.

வருத்தங்களும், தோல்விகளும் சகஜமானவை என்பதையும் அதைத் தாண்டாமல் யாரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள்.

பிறையாகத் தோன்றும் எல்லாமே முழு நிலவாகிப் பிரகாசிப்பதில்லை.

எத்தனையோ பிறைகள் அலட்சியத்தாலும், கடுமையான விமரிசனங்களாலும் அமாவாசை இருட்டாய் தொலைந்து போய் இருக்கின்றன.

ஒரு திறமை வெளிப் படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும் போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள்.

அன்னை தெரசாவைப் போல் தன்னலம் இல்லாத சேவைகளை செய்ய நமக்கு முடியாமல் இருக்கலாம்.

ஆனால் ,அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லலாம்  இல்லையா?

இந்தக் கணத்திலிருந்து சிரமமில்லாத, செலவில்லாத அந்த நல்ல செயலை நாம் செய்ய ஆரம்பிப்போம். இதைத் தான் பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் 'ஞெகிழ்வது அருளின்' என்கிறார்.

                                                       --------------------------------------


Post a Comment

புதியது பழையவை

Sports News