திருக்குறளுக்கு எடுத்துக்கட்டாக வாழ்ந்த மூதறிஞர் வ.சுப.மாணிக்கம்

 


திருக்குறளுக்கு 

எடுத்துக்கட்டாக வாழ்ந்த 

மூதறிஞர் வ.சுப.மாணிக்கம்



- முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்,

நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், 

திருநெல்வேலி


தமிழறிஞர், கவிஞர், பேச்சாளர், நாடகாசிரியர், ஆய்வாளர்,  உரையாசிரியர் என பன்முக ஆற்றல் உடையவர், மிகச் சிறந்த சிந்தனையாளர் வ.சுப.மாணிக்கம்.

புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரியில் 1917 ஏப்ரல் 17 பிறந்தார். இயற்பெயர் அண்ணாமலை. இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி, தாத்தாவிடம் வளர்ந்தார். 7 வயது வரை நடேச ஐயரிடம் குருகுலக் கல்வி கற்றார். தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர்.

 தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப.மாணிக்கம். 

நகரத்தார் குல மரபுப்படி தனது பதினொன்றாம் வயதில் வட்டித் தொழில் கற்றுக்கொள்வதற்காகப் பர்மா சென்றார். பர்மாவில் ரங்கூன் நகரத்தில் உள்ள வட்டிக்கடையில் பெட்டி உதவி செய்யும் சிறுவனாக வேலைக்குச் சேர்ந்தார். 


வட்டிக்கடை முதலாளி ஒரு சமயம் இவரிடம் ஒருவர் பெயரைக் சொல்லி அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால், 'முதலாளி இல்லை' என்று சொல்லிவிடுமாறு கூறினார்.

ஆனால் பொய் சொல்ல விரும்பாத அந்தச் சிறுவன், 'முதலாளி நீங்கள் வெளியில் சென்றிருந்தால் இல்லை என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இருக்கும்போது எப்படி இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன்' என்று பிடிவாதமாகக் கூறியதால் வட்டிக்கடையை விட்டு அப்போதே நீக்கப்பட்டார். இதனாலேயே இவருக்குப் "பொய் சொல்லா மாணிக்கம்" என்று பெயர் வந்தது.

பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உதவியுடன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ‘வித்வான்’ பட்டம் பெற்றார்.

பி.ஒ.எல் பட்டத்தையும் எம்.ஏ முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.



இவருடைய தமிழ் ஆய்வுக்கான எம்.ஒ.எல் பட்டம் "தமிழில் வினைச்சொற்கள்" என்ற பொருளில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்காகவும், முனைவர் (பிஎச்.டி) பட்டம் "தமிழில் அகத்திணைக் கொள்கை" என்னும் பொருளில் இவர் நடத்திய சங்க இலக்கிய ஆய்வுக்காகவும் அளிக்கப்பட்டன. 

தமிழில் வினைச்சொற்கள்’ என்ற பொருளில் ஆய்வு செய்து எம்ஓஎல் பட்டமும், தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, ராகவ ஐயங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், அ.சிதம்பரநாதன் செட்டியார் உள்ளிட்ட அறிஞர்களிடம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. 

காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். 1964 முதல் 1970 வரை அதன் முதல்வராகப் பணியாற்றினார். மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து அழைப்பு வந்ததால், அங்கு 1970–1977 வரை ஏழாண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.



மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக 1979 முதல் 1982 வரை மூன்றாண்டுகள் பணியாற்றினார். அப்போது, பண்டிதமணி அரங்கை நிறுவினார். பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன், அங்கு தமிழ் ஆய்வு நடைபெறவும் வழிவகுத்தார். இங்கு ஆற்றிய தமிழியல் வளர்ச்சி மற்றும் பிற அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கான சிறப்பான தொண்டுகள் அரசால் மிகவும் பாராட்டப்பட்டன.

 சிறிது காலம் திருவனந்தபுரத்தின் மொழி இயற் கழக ஆய்வு முதியராக வேலை பார்த்தபோது தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார்.

தமிழில் பல புதிய சொல்லாக்கங்களை தந்தவர். வீட்டிலும் கலப்படமற்ற தூய தமிழில் பேசினார். தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தினார். தமிழ்வழி கல்வி இயக்கம் என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். பழைமையையும் புதுமையையும் ஒருமித்த மனதோடு ஏற்றுப் போற்றினார். தமிழ்ச் சொல்லாக்கங்களை நடைமுறைப் படுத்துவதில் மிகவும் முனைப்புக் காட்டியவர். தமிழ் வழிக் கல்வி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி இவ்வியக்கம் நன்கு பரவும் வழி காண தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார்





இவருடைய திருமணம் 1945 ஆம் ஆண்டு நெற்குப்பை என்னும் ஊரைச் சேர்ந்த ஏகம்மை ஆச்சி உடன் நடந்தது. இல்லறத்தின் நல்லறமாக  இவர்களுக்குத் தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி என்று மூன்று ஆண் குழந்தைகளும்,  தென்றல்,  பொற்கொடி  என்று இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். இவருடைய திருமணத்திற்குப் பிறகுதான் இவருடைய ஆய்வுகளும், எழுத்துப்பணிகளும் மிக அதிகமாக இருந்தது.  

மிகவும் கண்டிப்பான தந்தை இருந்தார், ஒரு முறை இவரின் மகன் அழகப்பா கல்லூரியில் தேர்வு எழுதுகையில் தவறு செய்து மாட்டிக் கொண்டார். அப்போது கல்லூரி முதல்வர் இவர்தான்.  தவறு செய்த ஐந்து மாணவர்களையும் மேற்பார்வையாளர் முதல்வர் முன் நிறுத்துகிறார். முதல்வர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. மற்றவரைப் போல இவர் மகனுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட்டது. தரு செய்தவன் தன் மகன் ஆனாலும் தண்டித்தார். படிக்கும் எல்லா பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாக பார்த்தார். 




துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளர் என்ற பதவியில் ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொல்காப்பிய ஆய்வு மேற்கொண்டு, நூலாக எழுதி வெளியிட்டார். தொடர்ந்து பல நூல்களை எழுதினார். தினமும் அதிகாலையில் எழுந்து 4 மணி நேரத்துக்கு மேல் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர். கடுமையான உழைப்பாளி. சங்க இலக்கியங்களைத் தன் நுனிநாக்கில் வைத்திருந்தவர். மூதறிஞர், செம்மல், முதுபெரும் புலவர், பெருந்தமிழ்க் காவலர் என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டார். 

இவர் எழுதிய நூல்கள் : 

1. மனைவியின் உரிமை,1947

2. கொடைவிளக்கு,1957

3. இரட்டைக் காப்பியங்கள்,1958

4. நகரத்தார் அறப்பட்டயங்கள்,1961

5. தமிழ்க்காதல்,1962

6. நெல்லிக்கனி,1962

7. தலைவர்களுக்கு,1965

8. உப்பங்கழி, 1972

9. ஒருநொடியில்,1972

10. மாமலர்கள்,1978

11. வள்ளுவம்,1983

12. ஒப்பியல்நோக்கு,1984

13. தொல்காப்பியக்கடல்,1987

14. சங்கநெறி,1987

15. திருக்குறட்சுடர்,1987

16. காப்பியப் பார்வை,1987

17. இலக்கியச்சாறு,1987

18. கம்பர்,1987

19. தொல்காப்பியம் -எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை,1989

20. திருக்குறள் தெளிவுரை,1991

21. நீதிநூல்கள்,1991

22. The Tamil Concept of Love

23. A Study of Tamil Verbs

24. Collected Papers

25. Tamilology

26. எழுத்துச்சீர்திருத்தம், எங்கே போய்முடியும்?(1. ஏப்ரல் 1989)

27. தமிழ்வழிக்கல்வியியக்கம்: மொழியறிக்கை(15. மே 1989)

28. தமிழ்வழிக் கல்வியியக்கம்: மதுரை ஊர்வலம் நிகழ்ச்சி விளக்கம்(12. சூன் 1988)

தமிழ்நாடு அரசு இவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் 2006 ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கியது.




திருக்குறள் நெறிகளின்படி வாழ்க்கை நடத்திய அவர்  தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அறநிலையத்துக்கும், தன் சொந்த ஊரில் இலவச கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வழங்குவதற்காகவும் உயில் எழுதிவைத்தார். தன் நூலக நூல்களை அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு வழங்குமாறும் உயிலில் எழுதியிருந்த அவர்  திருக்குறளுக்கு எடுத்துக்கட்டாக வாழ்ந்து 1989 ஏப்ரல் 25-ம் தேதி 72-வது வயதில் மறைந்தார்.  


                                                       --------------------------------------------------




Post a Comment

புதியது பழையவை

Sports News