காதலித்துக் கைவிட்டவனைக் காதலி கேட்கும் கேள்விகள்.- கவிப்பேரரசு வைரமுத்து

 

காதலித்துக் கைவிட்டவனைக்

 காதலி கேட்கும் கேள்விகள்.-

கவிப்பேரரசு வைரமுத்து


கவிப்பேரரசு வைரமுத்துவின்

 "நாட்படு தேறல்"


பாடல் வரிகள் : 


நாக்குச் செவந்தவரே

நாலெழுத்து மந்திரியே

மூக்கு வெடச்சவரே

முன்வழுக்கை மன்னவரே


கூத்து முடிஞ்சிருச்சு

கொமரிப்புள்ள எதுக்குன்னு

பாத்தும் பாக்காமப்

பரபரன்னு போறீரோ!


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?

*

வைக்கப் போர்ப் படப்புக்கு

வடஇருட்டு மூலையில

அக்கப்போர் செஞ்சகதை

அய்யனுக்கு மறந்திருச்சோ?


சவரக் கத்திக்குத்

தப்பிச்ச குறுமுடியில்

முகர ஒரசுனது

முழுசாத்தான் மறந்திருச்சோ?


மொட்டு மொட்டு மல்லிகையை

முட்டிமுட்டித் தட்டிவிட்டு

முத்துமுத்து வேர்வைச் சொட்டு

மோந்தகதை மறந்திருச்சோ?


வாழைத் தோப்புக்குள்ள

வளவி ஒடச்சகதை

வாழை மறந்திருக்கும்

வலதுகையி மறந்திருமோ?

*

தேனேறிப் போயிருந்த

சிறுக்கிமக தலைமயிரு

பேனேறிப் போனதய்யா

பேச்சுவார்த்தை இல்லாம


புள்ளித் தேமலுக்கும்

புதுவேட்டி மடிப்புக்கும்

கருப்பட்டி ஒதட்டுக்கும்

கருத்தகிளி அலையுதய்யா


ஆறுசரம் சங்கிலியோ

அட்டிகையோ கேக்கலையே

மஞ்சக் கயித்துக்கு

மனசுக்குள்ள அரிக்குதய்யா


ஆம்பளைக சகவாசம்

அடுத்தொருத்தி வாரவரைக்கும்

பொம்பளைக சகவாசம்

புதைகாடு போறவரைக்கும்

                                -------------


Post a Comment

புதியது பழையவை

Sports News