ஐந்து ரூபாய் டாக்டர் திருவேங்கடம்

 ஐந்து ரூபாய் டாக்டர் திருவேங்கடம்

 உருவச்சிலை திறப்பு விழா.

 சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் ஏழை எளிய மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியாகும். இங்கு நீண்ட காலம் கிளினிக் நடத்தி ,மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளித்து வந்தவர் டாக்டர் திருவேங்கடம். அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 1970 களில் எம்பிபிஎஸ் படித்து குடிசை மக்கள் பகுதியிலேயே மருத்துவ சேவை செய்து தன் வாழ்நாளை கழித்தவர் டாக்டர் திருவேங்கடம். இதனால், வியாசர்பாடி பகுதியில் ஐந்து ரூபாய் டாக்டர் என்றும் மக்கள் மருத்துவர் என்றும் அழைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வயது மூப்பு காரணமாக இவர் மறைந்தார். இவருடைய மகத்தான மக்கள் சேவைகளை உணர்ந்த மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி  கவுரவித்தது.

டாக்டர் திருவேங்கடத்தின் நினைவைப் போற்றும் வகையில், இவருடைய மார்பளவு உருவச்சிலை திறப்பு விழா வியாசர்பாடியில் ,இவர் நடத்தி வந்த மருத்துவ சேவை மையத்தில்  நடைபெற்றது. 

மூத்த பத்திரிகையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் அவருடைய சிலையை திறந்து வைத்தார். 

பத்திரிகையாளர் தாம்பரம் சுப்பிரமணி, நம்பிக்கை சிகா நல அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் தூயவன் முதலான சமூக ஆர்வலர்கள்  விழாவிற்கான ஏற்பாடுகளை  சிறப்பாக செய்திருந்தனர்.

பெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்து ஐயா அவர்களின் மகன் ஆனை. பன்னீர்செல்வம், சம்பத், பத்திரிகையாளர்கள் திருவெற்றியூர் முருகன், அகஸ்டின் உட்பட சமூக ஆர்வலர்கள் உள்ளூர் மக்கள் விழாவில் பங்கேற்றனர்.

டாக்டர். திருவேங்கடத்தின் துணைவியார் சரஸ்வதி, அவரது மகள் டாக்டர் ப்ரீத்தி திருவேங்கடம் மற்றும் குடும்பத்தினர் விழாவிற்கு  வந்தோருக்கு நன்றி தெரிவித்தனர்.

விழாவிற்கு வந்த மாணவ- மாணவியருக்கு செடியும் திருக்குறள் புத்தகமும் வழங்கப்பட்டது.  -

Post a Comment

புதியது பழையவை

Sports News