கட்டுரைகள்


கட்டுரை எண் : 1
“பாராட்டப் பழகிக் கொள்வோம்”
nellaikavinesan25@gmail.com

nellaikavinesan.com



அது ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி.

ஏராளமான கூட்டம். பல்வேறு விதமான அதிசய ஆச்சரிய நிகழ்ச்சிகளை சர்க்கஸ்காரர்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ஒரு பக்கம் கூட்டத்தைச் சிரி
க்க வைக்க கோமாளி முயன்று கொண்டிருந்தான். இன்னொரு பக்கம் யானையை ஒரு சின்ன நாற்காலியில் உட்கார வைக்க முயற்சி நடந்து கொண்டிருந்தது.

மற்றொரு பக்கத்தில் கையில் நீளமான கம்பு ஒன்றை வைத்துக் கொண்டு மிக உயரத்தில் கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் நின்று கொண்டிருந்தான் ஒருவன். எந்தப் பிடியும் இல்லாமல் அந்த சிரிய இரும்புக் கம்பியின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு அவன் வரவேண்டும்.

கீழே விழாமல் இருக்க நீளமான கம்பியின் உதவியினால் தன்னை ‘பாலன்ஸ்’ செய்து கொண்டு மெதுவாய்க் கம்பியில் நடக்க முயன்றான். கூட்டம் பலமாய் கை தட்டியது. ஒரு முனையிலிருந்து  மறுமுனைக்கு அவன் வந்து விட்டான். கூட்டம் அவனை உற்சாகப்படுத்தத் தொடர்ந்து கை தட்டியது.

“நீளமான சிறிய கம்பியில் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு எந்தப் பிடியும் இல்லாமல் வந்து  விடுகிறானே” என ஆச்சரியப்பட்ட இரண்டு பேர் சர்க்கஸ் முடிந்ததும் அவனிடம் வந்தனர்.

“அழகாக நீ கம்பியில் நடக்கிறாய். பாராட்டுகள் உனக்கு இங்கு தினமும் எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்?’ எனக் கேட்டார்கள்.

“நூறு ரூபாய் “என்றான் அவன்.

“நாங்கள் தினமும் ஆயிரம் ரூபாய் உனக்கு சம்பளம் தருகிறோம். எங்களோடு வருகிறாயா?”.

“என்ன வலைக்கு?’

“இதே வேலைதான். இரும்புக் கம்பியில் ஒரு முனையிலிருந்து இன்னோரு முனைக்குச் செல்ல வேண்டும்.

“நீங்களும் சர்க்கஸ்தான் நடத்துகிறீர்களா?’

“இல்லை. எங்கள்தொழிலில் நீ ஒரு வீட்டு மாடியிலிருந்து இன்னொரு வீட்டிற்கு இரும்பு கம்பி மூலம் நடந்து சென்று அடுத்த வீட்டுக் கதவை திறக்க வேண்டும் இது தான் வேலை.”

“அது நம்மால் முடியாது…”
 
“திருட்டுத் தொழில் என்பதால் பயப்படுகிறாயா? நாங்கள் கொள்ளையடிப்பதில் பாதியை உனக்குத் தந்து விடுகிறோம்.”

“எது தந்தாரும் என்னால் முடியாது.”

“அப்போ  உனக்கு என்ன வேண்டும்.?’

“நான் கம்பியில் நடக்கும் போது கைதட்ட கூட்டம் வேண்டும்.”

“என்ன… என்ன சொல்கிறாய்…?”
 
“நான் சர்க்கஸில் கம்பியில் ஒரு முனையில் ஆரம்பித்து மறுமுனைக்குப் பாலன்ஸ் செய்து வரமுயற்சி செய்வதைப் பார்த்ததுமே கூட்டத்தினர் கைதட்டுவார்கள். அவர்கள் ஆர்வத்துடன் கைதட்டி என்னை உற்சாகப் படுத்துவதால் என்னால் உயரமாகக் கட்டப்பட்ட அந்த கம்பியில் தைரியமாக நடந்து முன்னேற முடிகிறது. கூட்டத்தினரின் பாராட்டுக்கள் தான் என்னை நடக்க வைக்கிறது.

ஆனால் உங்கள் திருட்டுத் தொழிலில் கைதட்ட ஆள் வைக்க முடியாது. கைதட்ட ஆள் இல்லையென்றால் நான் கீழே விழுந்து விடுவேன் உயிருக்கே ஆபத்தாகி விடும். என்னை விட்டு விடுங்கள்” என்று கூறி போய் விட்டான் சர்க்கஸ்காரன்.

ஓவ்வொரு செயலிலும் ஈடுபடும் போதும் மனம் பாராட்டுக்காக ஏங்குகிறது.

“நீ போட்டிருக்கிற ஜீன்ஸ் பேண்ட் ரொம்ப நல்லா இருக்குது. இந்த டிரஸ்ல சூப்பரா இருக்கே” என சொன்னதும் சிறுவனின் முகம் பூவாய் மலர்கிறது.

“அந்தக் கூட்டத்தில் நீங்கள் பேசும் போது அடுக்கடுக்காய் உவமைகளோடு பேசி கூட்டத்தையே அரச வைத்து விட்டீர்களே” இது எந்தப் பேச்சாளருக்கும் உற்சாகம் தரும் டானிக்.

“நீங்கள் செய்யும் சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்” என ஓரிரு வரியில் பாராட்டும் போது “இன்னும் சேவை செய்ய வேண்டும் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்” என்ற ஆர்வத்துடன் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் செயல்பட ஆரம்பிப்பார்கள்.

பாராட்டும்போது பாராட்டுப் பெறுபவரை அளவுக்கு மீறிப் பாராட்டுவது வஞ்சப்புகழ்ச்சி அணியாகி விடும்.

“இவரைப் பாராட்டினால் நிறைய பலன்கள் கிடைக்கும்” என எதிர்பார்த்து  போஸ்டர்கள் அடித்து ஒட்டுவதிலும், செய்தித் தாள்களில் விளம்பரங்கள் கொடுப்பதிலும் சிலர் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் பாராட்டு பெறுபவர்கள் சற்று எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

எப்போதும் ‘பாராட்டு’ எனற பெயரில் முகஸ்துதி பாடுவது பாராட்டு பெறுபவரைச் சிந்திக்கவிடாமல் செய்கிறது. இது அரசியலில் அதிகமாகி விட்டது.

ஆயினும் நல்ல மனதுடன் நமது நல்ல செயல்களைப் பாராட்டுவோரை ‘இனம்’ கண்டு அவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது சிறப்பான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.

கட்டுரை எண் : 2
கையாளத் தெரியாத கருவிகள்
nellaikavinesan25@gmail.com

nellaikavinesan.com


ஒரு பொருளை நம் பயன்படுத்த விரும்பினால் அந்தப் பொருளைப்பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த பொருளின் தன்மை, உருவாகும் பயன், அறிவு, ஆற்றல், பயன், வளர்ச்சி ஆகியவற்றிற்கு அந்தப் பொருள் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கிறது என்பதையும் தெளிவாக புரிந்துவைத்திருக்க வேண்டும். அதன்பின்னர்தான் அந்தப் பொருளை வாங்குவதற்கு முடிவெடுக்க வேண்டும்.

சிலர் பொருட்களை தனக்கு சொந்தமாக வாங்கி வைத்துக்கொண்டு அதனை எப்படி கையாள வேண்டும்? எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும்? என்பது தெரியாமல் திண்டாடுகிறார்கள். இதனால் மன அழுத்தம், சண்டை, எரிச்சல், கோபம், விரக்தி, போன்ற மனநிம்மதியைப் பாதிக்கும் விளைவுகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக, பள்ளி – கல்லூரி மாணவ, மாணவிகளில் சிலர், வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப மாற்றங்களை பயன்படுத்த வேண்டும் என்று ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஆனால் அதேவேளையில் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைப்பற்றிய பயிற்சியை முறையாக மேற்கொள்ளாததால் அவர்களது வாழ்க்கையில் வளர்ச்சி குறைந்து வருவதை இன்றும் காணலாம்.

‘செல்போன்’ - இது எல்லா மாணவ – மாணவிகளின் கையிலும், பையிலும் இருக்கும் ஒரு அற்புத தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு ஆகும். “செல்லும் இடமெல்லாம் கொண்டு செல்லும் போன்தான் செல்போன்” என்று கருதி அதனை தனது உடலின் பாகமாக எண்ணி செயல்படுபவர்களும் உண்டு. எப்போதும் செல்போனை கையில் வைத்துக்கொண்டு, எதையாவது செய்துகொண்டு சிலர் நேரத்தைக் கழிப்பார்கள்.

செல்போன் என்பது ஒருவரோடு மற்றவர் பேசுவதற்காக உருவாக்கப்பட்ட சிறந்த கருவிதான். அந்த கருவி எத்தனையோ விதத்தில் மனிதர்களுக்கு பயன்படும் வகையில் இப்போது வடிவமைக்கப்பட்டுவிட்டது. மாணவ – மாணவிகள், செல்போனை பயன்படுத்துவதற்கு பல பள்ளி, கல்லூரிகளில் தடைவிதித்திருக்கிறார்கள். இருப்பினும் சிலர் அந்த கட்டுப்பாட்டை மீறி செல்போனை வைத்துக்கொள்கிறார்கள்.  

“செல்போனை வைத்துக்கொண்டு நீ என்ன செய்கிறாய்?” – என்று சில இள வயதுக்காரர்களிடம் கேட்டுப்பார்த்தால் எத்தனையோவிதமான பதில்கள் கிடைக்கின்றன.

        “சென்போனில் ‘கேம்ஸ்’ விளையாடுகிறேன்”
        “‘மெஸேஜ்’ அனுப்புகிறேன்”
        “‘வாய்ஸ் ரெக்கார்ட்” பண்ணுகிறேன்”
        “போட்டோ எடுக்கிறேன்”
        “வீடீயோ சூட் பண்ணுகிறேன்”
        “பாட்டு கேட்கிறேன்”
        “சினிமா பார்க்கிறேன்”
        “இண்டர்நெட்டில் ‘இ - மெயில்’ அனுப்புகிறேன்”

             – என எத்தனையோ விதமான பதில்கள் நமக்கு கிடைக்கின்றன. ‘செல்போன்’ என்பதை ‘மொபைல் போன்’ என்று அழைக்கிறார்கள். அதாவது ‘அலையும் இடமெல்லாம் அலைபேசி’ இருக்கவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு “செல்போன்” என்னும் கருவி இன்றைய இளைஞர்கள் வாழ்வில் தவிர்க்க இயலாத ஒரு கருவியாக மாறிவிட்டது. மிகக்குறைந்த கட்டணத்தில் எத்தனையோ விதமான பயன்பாடுகளை இந்தக் கருவி உள்ளடக்கியிருப்பதால் இளைய உள்ளங்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கருவியாக செல்போன் அமைந்துவிட்டது.

தகவல் தொடர்புக்கு (Communication) உதவும் மிகச் சிறந்த கருவியாக விளங்கும் செல்போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பலர் முறையாக தெரிந்ததில்லை.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அனந்தகிரி பகுதியைச் சேர்ந்த மாணவி தனது தங்கையோடு திருச்சியிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். விடுதியில் ஒரே அறையில் தனது தங்கையோடு தங்கிய அந்த மாணவி அறையிலிருக்கும்போதெல்லாம் செல்போன்மூலம் தனது காதலனுடன் பேசி வந்தாள். ‘இப்படி செல்போனில் பேசுவது தவறு’ என்று தனது அக்காவை தங்கை கண்டித்தாள். தங்கையின் எதிர்ப்பை கண்டுகொள்ளாத அக்கா தொடர்ந்து செல்போனில் பேசிவந்தால். அக்காளின் காதல் விவகாரத்தை தன் வீட்டுக்கு தெரிவித்தாள் தங்கை. வீட்டிலுள்ள பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறினார்கள். ‘காதல் விவகாரம்’ தனது வீட்டுக்கு தெரிந்ததால் மிகுந்த மனவேதனை அடைந்த அக்கா தங்கையோடு பிரச்சினையை உருவாக்கினாள்.

அன்று இரவு 10 மணி. 

அறையிலிருந்து பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென கோபத்தோடு எழுந்து விடுதியின் மாடிக்குச் சென்றாள். அவள் பின்னால் தங்கை செல்லும்போதே இரண்டாவது மாடியிலிருந்து அவளின் அக்கா குதித்தாள். கீழே தரையில் விழுந்த அவளுக்கு தலைபகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டுசென்றபின்பும் பலன் இல்லாமல் அந்த இளம் மாணவி இறந்துபோனாள்.

இந்தச் சம்பவம் செல்போன்மூலம் உருவான காதலால்தான் ஏற்பட்டது என்பதை பலரும் உணர்ந்துகொண்டார்கள்.

இப்படி – செல்போன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் அங்கங்கே அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அவசியமான, அவசரமான, நல்ல தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செல்போன் என்னும் கருவியை கையில் வைத்துக்கொண்டு இன்று குற்றங்கள் புரிவதற்கும், தற்கொலை, கொலை போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்துவதற்கும் உதவும் கருவியாக சிலர் மாற்றிவிட்டார்கள். எனவேதான், செல்போனை பயன்படுத்துவதற்குமுன்பு அந்தக் கருவியை எப்படி நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை முதலிலேயே திட்டமிட்டுக்கொள்ளவேண்டும். கைக்குள் அடக்கமாக வைத்துக்கொள்ளும் அளவுக்கு மிகச்சிறிய கருவியாக இருந்தாலும் செல்போனை ஒழுங்காக கையாளத் தெரியாவிட்டால், அது இளைஞர்களின் வளர்ச்சியில் வைக்கப்படும் “அணுகுண்டு”போல் ஆகிவிடும் என்பதை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

விளையாட்டாக செல்போனை வாங்கி – அதில் வி~மத் தனங்கள் செய்வதற்கும், ஆபாசப் படங்களை எடுப்பதற்கும், அசிங்கமான எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவதற்கும், ‘கேம்ஸ்’ என்ற பெயரில் நேரம் போக்குவதற்கும் பயன்படுத்துவது படிப்பை பாழாக்கிவிடும். அறிவியலின் அற்புத கண்டுபிடிப்பான செல்போன் படிப்பில் சிறந்து விளங்குவதற்கும், பண்பில் செழுமை பெறுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கு செல்போனை எப்படி இயக்கவேண்டும் என்று விவரக் குறிப்பு (Bio Data) அச்சடித்துக் கொடுப்பதைப்போல செல்போனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்க குறிப்புகளை அச்சடித்துக் கொடுப்பது நல்லது. செல்போனை பயன்படுத்தும்போது பள்ளி கல்லூரி மாணவ – மாணவிகள் தெரிந்து வைக்கவேண்டிய சில குறிப்புகள்.

1.தேவையான நேரத்தில் மட்டுமே செல்போனை பயன்படுத்துங்கள்.
2.பள்ளி, கல்லூரி நேரங்களில் செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
3.நூலகம், மக்கள் கூடியிருக்கும் பொதுஇடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
4.அலுவலகம் மற்றும் பொது இடங்களில் உரத்த குரலில் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
5.செல்போனில் அழைப்பு மணி ஒலித்தஉடன் மற்ற வேலைகளை நிறுத்திவிடுங்கள்
6.நீண்ட நேரமாக செல்போனில் பேசும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
7.நல்ல மனநிலையோடு பேச்சை ஆரம்பியுங்கள். குரலை சரி செய்து நிதானமாகப் பேசுங்கள்.
8.மரியாதையாகப் பேசுங்கள்.“வணக்கம்” சொல்லி பேச்சைத் தொடங்குங்கள்.
9.பேச்சில் அதிகக் கவனம் செலுத்துங்கள். கவனத்தைச் சிதறடிக்காதீர்கள்.
10.பேசி முடித்தபின்பு ‘நன்றி’ சொல்ல பழகிக்கொள்ளுங்கள்.

செல்போனைபோலவே மாணவ – மாணவிகளின் கவனத்தைத்திருப்பும் இன்னொரு கருவி டி.வி. ஆகும். “தொலைக்காட்சி பெட்டி” என்று இதனை அழைத்தாலும் “தொல்லைக்காட்சி பெட்டி”யாக இதனை எண்ணுபவர்களும் உண்டு.

“என் மகள் ஸ்கூலில் இருந்து வந்ததும் டி.வி. முன் உட்கார்ந்து விடுகிறாள். இவள் படிப்பை கெடுப்பதே இந்த டி.வி.தான்” – என்று வருத்தப்படும் பெற்றோர்கள் மிகவும் அதிகம்.

“என் பையன் இப்போது பிளஸ் 2 படிக்கிறான். இதனால் வீட்டிலுள்ள டி.வியை அட்டைப் பெட்டியில் வைத்து மாடியில் ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். இனி பிரச்சினையில்லை. இப்படி மகிழும் பெற்றோர்களும் உண்டு.

வீட்டிலிருக்கும் ஒரு கருவியை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதற்குப்பதில் அந்தக் கருவியை பிள்ளைகளின் கண்களில் காணாமல் மறைத்துவைக்க வேண்டும் என எண்ணுவது நியாயம் தானா?

டி.வி.யை எப்போது பார்க்க வேண்டும்? எவ்வளவு நேரம் பார்க்கவேண்டும்? அதிலுள்ள கருத்துக்களை எப்படி சேகரிக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையை தெளிவாக எடுத்துக்கூறி, தனது பிள்ளைகளிடம் பெற்றோர்கள் நம்பிக்கை ஊட்டவேண்டும். “டி.வி. என்பது கவனத்தை சிதைக்கும் கருவியல்ல” என்பதை அவர்கள் உணரும்படி செய்யவேண்டும். பிள்ளைகள் படிப்புக்காக இரண்டு ஆண்டுகள் டி.வி நிகழ்ச்சிகளை பார்க்காத பெற்றோர்கள், இரண்டு ஆண்டுகள் அறிவு சேகரிப்பை நிறுத்தம் செய்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?

மாணவ – மாணவிகளுக்கு மகிழ்வூட்டும் கருவியாக முன்பு டேப்ரிக்கார்டர் இருந்தது. இப்போது டி.வி.டி. பிளேயர், துல்லிய இசையை வழங்கும் ஸ்பீக்கர்கள் இணைந்த ஹோம் தியேட்டர் வசதி போன்றவைகள் உள்ளன. முன்பெல்லாம் தியேட்டரில்போய் சினிமா பார்க்கவே அனுமதி கொடுக்காத பெற்றோர்களும் இருந்தார்கள். இப்போது தங்கள் வீட்டையே ஹோம் தியேட்டராக மாற்றி மகிழும் பெற்றோர்கள் அதிகமாகிவிட்டார்கள். இதனால் எப்போது இசையை ரசிக்க வேண்டும்? திரைப்படங்களை பார்க்க வேண்டும்? என்பதை திட்டமிடாத சில இளைய உள்ளங்கள் படிப்பை தியாகம் செய்துவிடுகிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.

கம்ப்யூட்டர் என்னும் கருவியும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் உருவான மிகச்சிறந்த கண்டுபிடிப்பு ஆகும். இன்று “லேப்டாப்” போன்ற மடிக்கணினிகளை மாணவ – மாணவிகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். எல்லோரும் பயன்படுத்தும் இந்த கம்ப்யூட்டரை நல்ல முறையில் வாழ்க்கையை வளமாக்குவதற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இளைய உள்ளங்களுக்கு பெற்றோர்கள். கற்றுத்தர வேண்டும். “இண்டர்நெட் உலகம்” மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக அமைந்து தகவல்களை அனைவருக்கும் அள்ளிவழங்குகிறது. அந்தத் தகவல்களில் நல்ல தகவல்கள் எது? தரமற்ற தகவல்கள் எது? என்பதை பிரித்து உணர்ந்துகொள்ளும் திறனை மாணவ – மாணவிகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

“கத்தி என்பது ஒரு கருவி. இந்தக் கத்தியைக்கொண்டு கனியையும் வெட்டலாம். கையையும் வெட்டலாம். எதை வெட்ட வேண்டும் என்பது அதைக் கையாளுகின்ற மனதனின் மனத்தைப் பொறுத்து அமைகிறது. இதைப்போலத்தான் செல்போன், டி.வி., ஹோம் தியேட்டர், கம்ப்யூட்டர் போன்றவைகள் தொழில்நுட்ப கருவிகளாகும். இந்தக் கருவிகளை தெளிவான முறையில் இனங்கண்டு, நல்ல முறையில் கையாளத் தெரிந்த இளைஞர்கள் மட்டுமே அதனை தங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு துணையாக மாற்றிக்கொள்கிறார்கள்.

எனவே - இந்தக் கருவிகளை நலமாக கையாள பழகிக்கொள்வோம். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றிகள் உருவாகும்.



கட்டுரை எண் : 3
மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
nellaikavinesan25@gmail.com

nellaikavinesan.com





இளமைப் பருவத்தில் இளைஞர்களில் பலர் பல்வேறு எதிர்காலக் கனவுகளோடு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்ந்து கல்வி பயிலுகிறார்கள். கல்வி நிலையங்களில்தான் இவர்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். 

மிக அதிக நேரத்தை பள்ளி மாணவ - மாணவிகள் கல்வி நிலையங்களில் செலவிடுவதால், இளம்பருவத்தில் ஏராளமான பிரச்சினைகளும், இடையூறுகளும் மாணவர்களுக்கு தானாக வந்துவிடுகின்றன.

இந்த இனிமை நிறைந்த இளமைப்பருவத்தில் மிகவும் சரியான முறையில் திட்டங்களை உருவாக்கி, நல்ல செயல்களில் ஈடுபட்டவர்கள் மட்டும்தான் வாழ்க்கையின் வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிக்கிறார்கள்.

அழகே... வா
பள்ளி, கல்லூரிகளில் பயிலும்போது மாணவ-மாணவிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுகிறார்கள். இவர்கள், தங்களது உடல் அமைப்பு மிகவும் அழகாக அமைய வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள். உடலமைப்பு அழகாக இருந்தால்தான் ஊரிலுள்ளவர்களும், உடன் படிக்கும் மாணவ - மாணவிகளும் மரியாதைத் தருவார்கள் என்ற எண்ணத்தோடு தங்கள் உடலை பராமரிப்பதில் அதிக நேரத்தைப் போக்குவார்கள்.

இதனால், இளம்வயதில் மாணவ - மாணவிகள் அடிக்கடி தங்களைப்பற்றி மட்டுமே அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். உடல் ரீதியாக ஏற்படும் இந்த மாற்றங்கள் இளம் பருவத்தினரின் மனதிலும் பல்வேறு மாற்றங்களை உருவாக்கிவிடுகிறது. பொதுவாக, உடல் வளர்ச்சிகாணும் நிலையில் இவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். “இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நிலைக்க வேண்டும்” என்ற எண்ணத்தின் அடிப்படையில் இவர்களது செயல்கள் அமையும்.

‘தங்களுக்கு எவையெல்லாம் மகிழ்ச்சி தருமோ அவையெல்லாம் உடனே கிடைக்க வேண்டும்’ என்றும், ‘மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் உடனே நிகழ வேண்டும்’ என்றும் சிந்தித்து அந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இந்த மகிழ்ச்சி கிடைப்பதற்கு யாரெல்லாம் தடையாக இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் எதிரியாக பார்ப்பார்கள்.

இழந்தது என்ன?

எதிலும் தெளிவாக முடிவெடுக்க முடியாத நிலையில் இவர்கள் காணப்படுவார்கள். எப்போதும் ஆழ்ந்து கவனம் செலுத்த இயலாத நிலையில் இருப்பார்கள். ஆர்வத்தோடு பணிகள் செய்ய விருப்பம் இல்லாமல் இருக்கும் நிலையை இந்த இளமைப்பருவம் செய்துவிடும். மற்றவர்களிடம் குற்றம் கண்டுபிடித்து குறைசொல்லும் பழக்கமும் இந்த மாணவப் பருவத்தில் அதிகமாகக் காணப்படும். மிகப்பெரிய குற்றம் செய்தது போன்ற உணர்வோடு சிலவேளைகளில் இளம் வயதினர் இருப்பதற்கும் இந்தப் பருவம்தாம் காரணம் ஆகும். எதையோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வும், எதிர்மறையான எண்ணங்களும் அடிக்கடி இந்த இளம்பருவத்தில் மனதில் தோன்றுகிறது.

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் பல பிரச்சினைகள் இளம் பருவத்தினரை தாக்கும் ஆயுதங்களாக மாறிவருகின்றன.

இந்தியாவிலுள்ள மாணவ-மாணவிகள் என்னென்ன பிரச்சினைகளால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்? என்று ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள்-பிரச்சினை பற்றிய ஆய்வு முடிவுகள் மாணவர்களின் உண்மையான பிரச்சினையை படம்பிடித்துக் காட்டுகிறது.
 


தரமான கல்வியா?

“தரமான கல்வி (Quality Education) பல இந்திய கல்வி நிலையங்களில் வழங்கப்படவில்லை” என்பது இந்திய கல்வி பற்றிய ஆய்வின் முடிவாகும். இது, இந்திய கல்வி முறைக்கு எதிரான மிகப்பெரிய குற்றச்சாட்டு ஆகும்.

ஏராளமான பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் கல்வியை வழங்கி வருகின்றன. கட்டுப்பாடான சூழலில் பள்ளியில் பயின்று, கல்லூரியில் நுழைந்த பின்னர், ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் ஆண்டுதோறும் உருவாக்கப்படுகிறார்கள். இருந்தபோதும், அவர்களில் பலர் தரமான வேலையைப் பெற இயலாமல் தவிக்கின்ற சூழல் உருவாகிவிடுகிறது.

“பட்டம் பெற்றபின்பும் வேலை கிடைக்கவில்லையே?” என்ற வேதனையில் வீழ்ந்து இளம் பட்டதாரிகள் தவிக்கிறார்கள். இருப்பினும் தனது தகுதியையும், தரத்தையும் உயர்த்திக்கொள்ள இயலாத மனநிலை சில இளைஞர்களிடம் இன்றும் காணப்படுகிறது.

“வேலையைப் பெற்றுத் தருகின்ற அளவுக்கு மாணவர்களுடைய சிறப்புத் திறன்களை வளர்ப்பதற்கு கல்வி நிலையங்கள் தவறிவிட்டன” என்பது சில கல்வியாளர்களின் கருத்து ஆகும்.

படித்து முடித்த பின்பும், பட்டம் பெற்ற பின்பும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்பதால் பல பட்டதாரிகள் “படிப்பதால் பலனில்லை” என்று தங்கள் அனுபவத்தை இளைய மாணவ - உள்ளங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால், ‘நன்றாக படிக்க வேண்டும்’ என்ற ஆர்வம், படிக்கும் இளைஞர்களிடம் குறைந்துகொண்டே வருகிறது. இது இளம் மாணவர்களைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதமாகவே திகழ்கிறது.



சுற்றிவரும் சூழல்கள்

இந்தியாவில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். படிப்பு அறிவில்லாத பெற்றோர்களின் அரவணைப்பில் வளரும் பல மாணவர்களுக்கு படிப்பைப் பற்றிய வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை. இதனால், எந்தப் படிப்பை விருப்பப் பாடமாக எடுத்து படிப்பது? என்கின்ற குழப்பம் பல மாணவர்களிடம் இன்றும் காணப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் படிப்புகளைப் பற்றிய விவரங்களும் சிலருக்குத் தெரிவதில்லை. இன்னும் சில மாணவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படிப்பு பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத மனநிலையிலும் காணப்படுகிறார்கள். இதுவும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் சூழலை உருவாக்கி, மாணவர்களின் வளர்ச்சியை பெருமளவில் தாக்குகிறது. 

குடும்பத்தில் நிலவும் ஏழ்மை நிலைமை பல மாணவ-மாணவிகளின் படிப்புக்கு தடையாக அமைந்துவிடுகிறது. பிறரிடம் கடன்வாங்கி, கல்வி நிலையங்களில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் சில பெற்றோர்கள், கல்வி கடனை திருப்பி செலுத்துவதற்காகவே பல வருடங்கள் தீவிரமாக உழைக்க வேண்டியநிலை உள்ளது. கல்வி உதவித் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கினாலும், தனியார் கல்வி நிறுவனங்களின் பள்ளிக் கட்டணமும், கல்லூரி கட்டணமும் மிக அதிகமாகவே அமைவதால் இது பெரும் சுமையாக மாணவர்களுக்கு அமைந்துவிடுகிறது.
 

தகுதியில்லா ஆசிரியர்கள்

தகுதியும், தரமும் குறைந்த அனுபவமில்லாத நபர்களை ஆசிரியர்களாக நியமித்து, மாணவர்களுக்கு பாடம் நடத்த வாய்ப்பு வழங்குவது இளம் தளிரின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயலாகும். இது-சப்தமில்லாமல் சமுதாயக் கொலை செய்வதற்கு ஒப்பாகும். இந்த செயல், மாணவ உள்ளங்களில் காயங்களை ஏற்படுத்தி அவர்களின் வளர்ச்சியில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

பள்ளிகளில் படிக்கும்போது பாடப் புத்தகங்களின் சுமை அதிகமாகிவிடுவதால், பெரும்பாலான மாணவர்களுக்கு “மனச்சுமை” அதிகமாகிவிடுகிறது. இதனால், படிக்கும் பாடத்தில் அதிக கவனம் செலுத்த இயலாதநிலை மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்டுவிடுகிறது. இன்னும் சில மாணவர்கள், “தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம்” என்கின்ற பயத்தோடு நாள்தோறும் இருக்கிறார்கள். தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் தங்கள் பெற்றோர்கள் அதிகமாக வருத்தப்படுவார்கள் என்று எண்ணி சிலர் பயப்படுகிறார்கள்.

“என் குடும்பத்திற்கு நான் வீண் பாரமாக அமைந்துவிட்டேன்” என்று நினைப்பதாலும் சில மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால், உண்மையிலேயே அவர்கள் தேர்வில் தோல்வியடையும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. இதுவும், மாணவர்களைத் தாக்கும் பெரும் ஆயுதமாகத் திகழ்கிறது.
 

பாலினக் கவர்ச்சி

மாணவப் பருவத்தில் ஏற்படும் ‘பாலினக் கவர்ச்சி உணர்வு’ மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த உணர்வை மிகவும் கவனமாகவும், முறையாகவும் கையாளாவிட்டால், அது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கிவிடும். கல்விநிலையங்களில் பயிலும்போது உருவாகும் பல்வேறு பாலினப் பிரச்சினைகள் பலவேளைகளில் பாலின உணர்வுகள் பற்றித் தெளிவாக அறியாததினால்தான் (Ignorance) ஏற்படுகிறது. சினிமா, டி.வி., போன்றவற்றால் இந்த உணர்வு அதிகரிக்கப்படுவதால், மாணவர்களின் படிப்பு கவனம் பெருமளவில் சிதைக்கப்படுகிறது.
 

ராகிங் கொடுமை

கல்வி நிறுவனங்களில் புதிதாக சேருபவர்களை “ராகிங்” செய்து கொடுமைப்படுத்தும் பழக்கம் சில கல்வி நிலையங்களில் அரங்கேறிவிடுகிறது. இதனால், முதலாம் ஆண்டு சேர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

“சீனியர்கள்” என்ற பெயரில் புதியவர்களை அழைத்து தரக்குறைவான செயல்களைச் செய்யும்படி தூண்டுவது பெரும் பயத்தை புதிய மாணவ-மாணவிகள் மனதில் ஏற்படுத்திவிடுகிறது. அது நீங்காத வடுவாக மனதில் அமைந்துவிடுகிறது.

கல்வி நிலையங்களில் காணப்படும் போதைப்பழக்கம், மதுபானம் அருந்துதல், புகைப் பிடித்தல் போன்ற செயல்கள் “மாணவர்களின் எதிர்காலத்தை வீழ்த்தும் ஆயுதங்கள்” என்பதை இளம் உள்ளங்கள் அறியாமல் இருக்கிறார்கள். இதனால், இந்தப் பழக்கத்திற்கு சிலர் அடிமையாகிவிடுகிறார்கள். இதன் காரணமாக ஏராளமான பிரச்சினைகள் அவர்கள் வாழ்வில் அடிக்கடி தோன்றி, நிம்மதி இழக்கச் செய்துவிடுகிறது.

பள்ளிகளில் படிக்கும்போதே, சில பாடங்கள் சில மாணவர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால் அந்தப் பாடத்தின்மீதும், அந்தபாடம் நடத்தும் ஆசிரியரின்மீதும் வெறுப்பை ஏற்படுத்திக்கொண்டு, காரணமில்லாமல் அந்தப் பாடத்தை படிக்காமல் இருப்பது மாணவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக அமைகிறது.
 

தற்கொலையா?

படிக்கும் காலத்தில் சின்னச்சின்ன பிரச்சினைகளுக்குக்கூட “தற்கொலை செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தை சிலர் உருவாக்கிக் கொள்கிறார்கள். குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கும், தேர்வில் தோல்வியடைந்ததற்கும், ‘ஆசிரியர் திட்டிவிட்டார்’ என்பதற்கும், அர்த்தமில்லாமல் ஆத்திரப்பட்டு ‘தற்கொலை’ ஆயுதத்தை கையில் எடுப்பதும் தரமிக்க செயல் என்பதை இளைய உள்ளங்கள் உணர வேண்டும். 
தீர்வு என்ன?
மாணவர்களைத் தாக்கும் கொடூர ஆயுதங்களாக இந்தப் பிரச்சினைகளெல்லாம் பல்வேறு வடிவங்களில் கல்வி நிலையங்களில் தோன்றுகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் முன்வர வேண்டும். 

மிகவும் கவனத்துடன் செய்யவேண்டிய பணி எது? வேடிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டிய செயல் எது? என்பதற்கான வித்தியாசத்தை இளம் பருவத்தினர் தெளிவாக உணர்ந்துகொள்ளும்படி செய்வதற்கு, பெற்றோர்களும், ஆசிரியர்களும் முன்வர வேண்டும். இதன்மூலம், இளம் மாணவ-மாணவிகள் சமுதாயப் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாத்துக்கொள்ள உதவலாம். மேலும், சமுதாயப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து கொள்ளவும் அவர்களுக்கு உதவ வேண்டும்.  

பாலினப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக ‘கவுன்சலிங்’ (Counselling) எனப்படும் “கலந்துரையாடித் தீர்வுகாணும் முறை”யை மாணவ-மாணவிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், பாலினப் பிரச்சினைகளால் தோன்றும் நோய்களைப்பற்றி விளக்கம் அளிக்கும் வகையில், இவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை கல்வி நிலையங்களில் நடத்தவும் ஏற்பாடு செய்யலாம். 

தங்கள் பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வுகாணவும், மாணவ - மாணவிகள் முன்வர வேண்டும். தங்களுக்கு மன ரீதியாகப் பிரச்சினைகள் எழும்போதும், பிரச்சினைகள் உருவாகி தற்கொலை எண்ணம் ஏற்படும்போதும் தகுந்த உளவியல் மருத்துவ ஆலோசகரிடம் சென்று பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சி செய்யவேண்டும். 

இளம்பருவத்தில் இறை நம்பிக்கையுடன்கூடிய பக்தி உணர்வை வளர்த்துக்கொள்வதும், மாணவ-மாணவிகள் தாங்களாகவே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவும். கல்வி நிலையங்களில் நடத்தப்படும் கலை, இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு கலை ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவியாய் அமையும். தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தகுந்த நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசி, பிரச்சினை தரும் மன அழுத்தங்களை குறைத்துக்கொள்ளலாம். 

இப்படி-பல்வேறு முறைகளில் மாணவ-மாணவிகள் தங்கள் பிரச்சினைகளை அடையாளம்கண்டு அவைகளைத் தீர்ப்பதற்கான சரியான வழிகளில் ஈடுபட்டால், வாழ்க்கையில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும் எப்போதும் நிறைந்திருக்கும்.

Post a Comment

புதியது பழையவை

Sports News