தியாகப் பரிசு



புத்தகத்தைப்பற்றி…

“தியாகப் பரிசு” என்னும் இந்தநூலில் இடம்பெற்றுள்ள அத்தனை சிறுகதைகளிலும் நெல்லை கவிநேசன் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ஒவ்வொரு கதைகளிலும் ஒரு படிப்பினை இருப்பதை நீங்கள் படித்து ரசிக்கத்தான் போகிறீர்கள்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள முதல்கதையின் தலைப்பு ‘தியாகப் பரிசு’. இதில் தன் உள்ளுணர்வுகளை மட்டுமே கதாபாத்திரங்களாக்கி, தன்னைப் போன்ற ஒரு கல்லூரிப் பேராசிரியரை உருவாக்கி வினயமாய்த் தன் இலக்கிய விளையாட்டைத் துவங்கியிருக்கின்றார். இக்கதையில் வரும் பேராசிரியர் நம் மனக்கண்ணில் வந்து நிற்பதும், மாணவனே அவரின் மகனாய் நிற்கிறான் என்ற மகிழ்வில் அவர் துள்ளலிடுவதும் நூலாசிரியரின் எழுத்துவன்மைக்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றது.

‘மனங்கள்’ என்ற கதையில் சின்ன ஒரு நூலிழையை வைத்து நல்ல ஒரு பின்னலிட்டிருக்கின்றார். நூலாசிரியர் பிறந்த செட்டிக்குளத்தையும், அவருக்கு இடம்தந்த திருச்செந்தூரையும் கதையில் காட்டியபோதே நான் பிறந்த உவரியையும் தொட்டுவிட்டுப்போயிருக்கிறார் என்பதில் எனக்கும் மகிழ்வே.

‘மனதில் உறுதி’ என்ற கதையில் தற்கொலை செய்ய நினைக்கும் கோழைகள் தலையில் ஓங்கி அடிக்கும் இவரின் லாவகத்தை நான் மெச்சுவதுபோலவே நீங்களும் வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள் முகிழ்ந்திருக்கிறது. ‘பலியாடுகள்’ என்ற கதையில் கிராமத்து மூடநம்பிக்கைகளைச் சாட முனைந்த இவர் தந்த முடிவில் ஒரு கணம் நம் இதயமே ஸ்தம்பித்து நின்றுதான் போகின்றது.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இந்த என் இளவல் தன் பேனாவில் மை நிரப்ப மறந்து உணர்வுப் பூர்வாங்கம், அறிவுப் பூர்வாங்கம், யதார்த்தம், மண்மனம் என எல்லாவற்றையும் கலந்து நிரப்பியுள்ளார் என்பது தெரிகின்றது. இதுவே இவரின் வெற்றி என்பதை நான் பூரிப்புடன் கணித்து மகிழ்கின்றேன். இவரின் தமிழ் உலாவிற்கு நீங்களும் வாழ்த்துச் சொல்வீர்கள் என நம்புகின்றேன்.


(தியாகப்பரிசு நூல் அணிந்துரையில் பிரபல எழுத்தாளர் தாமரை செந்தூர்பாண்டி)

விலை: ருபாய். 30/-

Post a Comment

புதியது பழையவை

Sports News