தனியே இருப்பதொன்றும் தவிப்பில்லை நண்பர்களே

தனியே இருப்பதொன்றும் தவிப்பில்லை.
                                   ஏர்வாடி .எஸ் .ராதாகிருஷ்ணன்




தனியே இருப்பதொன்றும்
         தவிப்பில்லை நண்பர்களே
நினைவுகளை அசை போட
          நல்லதிந்த வாய்ப்பாகும்.
தோணும் போதெல்லாம்
         தொலைபேசி அழையுங்கள்
போனில் பேசினாலும்
         போய்ப் பார்த்தநிறைவிருக்கும்.

தனித்திருந்தால் நீங்களொன்றும்
         செத்துவிட மாட்டீர்கள்
தனித்திருந்து தியானித்தால்
         தினம் மகிழ்வு பெறுவீர்கள்
தினமொருநூல் என்னுமொரு
         தவமியற்றப் பழகுங்கள்.
மனைவியிடம் மனம் திறந்து
         மறந்த கதை பேசுங்கள்

வீண்வம்பு வெளியிலில்லை
         வெட்டியாக அலைச்சலில்லை
காண்கின்ற இடமெதிலும்
         காற்று மாசு பெருகவில்லை
வானிருந்து பார்க்கும் போது
         வனப்பாகத் தோன்றுமின்பம்
வேணும் நம் ஊர்களுக்கு
         விடுமுறைநாள் தவறே இல்லை.

கோவில்களை அடைத்தாலும்
       கடவுளர்க்குக் கோபமில்லை
பாவிகள்நம் வருகை நின்றால்
       பெரிதாக வருத்தமில்லை
தேவையெனில் தெய்வம் மெல்லத்
      தேடிநம் வீடு வரும்
பாவம் அவை ஓய்வெடுக்கப் 
     பேருதவி சிலநாள் செய்வோம்

கூடுவதால் மக்களெல்லாம்
      குழப்பங்கள் செய்வதாலும்
தேடுகின்ற பொருள் வெறியில்
     தீமைகளே நிகழ்வதாலும்
நாடும்நம் நலம் மறந்து
     நோய்களை நாம் பகிர்வதாலும்
வீடுதான் கதியென்று 
       வாழ்வதுவும் நன்மையாகும்.

                            ..........................

Post a Comment

புதியது பழையவை

Sports News